திருப்பத்தூர் மாவட்டம் மசிகம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனிராஜ் (45). இவர் பல ஆண்டுகளாக பாலாற்று படுக்கையில் குடில் அமைத்து வாத்துகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 5 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட வாத்து குஞ்சுகளை பச்சகுப்பம் பாலாற்று கரையோரம் குடில் அமைத்து வளர்த்து வந்தார்.
நிவர் புயல் காரணமாக திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் நேற்று (நவ 26) கனமழை பெய்ததையடுத்து ஆம்பூரை சுற்றியுள்ள காப்புக்காடுகளிலிருந்து காட்டாற்று வெள்ளம் உருவாகியது. இதைத் தொடர்ந்து, பெத்தப்பல்லி காட்டாற்று வெள்ளம் பாலாற்றில் கலப்பதற்காக அதிக அளவில் வெள்ளம் வந்த போது பாலாற்றின் கரையோரம் 3 குடில்களை காட்டாற்று வெள்ளம் அடித்துச்சென்றது.
நள்ளிரவில் செய்வதறியாது திகைத்த வாத்து மேய்பவர்கள் வெள்ளத்திலிருந்து தங்களை காக்க நிலப்பகுதிகளுக்கு ஓடிச்சென்றனர். இதனால் குடிகளில் இருந்த 5 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட வாத்து குஞ்சுகள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. மேலும், வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட மொத்த வாத்து குஞ்சுகளின் மதிப்பு ஒரு லட்சம் என உரிமையாளர் தெரிவித்தார்.