ETV Bharat / state

வாழைப்பழத்தால் வந்த வினை - காதல் கணவரை கொலை செய்த மனைவி கைது

author img

By

Published : May 23, 2022, 7:13 PM IST

காதல் கணவரை கொலை செய்த மனைவி கைது
காதல் கணவரை கொலை செய்த மனைவி கைது

திருச்சியில் குழந்தைக்கு வாழைப்பழம் வாங்கி வராமல் மது அருந்திவந்த காதல் கணவரை மனைவி கொலை செய்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி: சுப்பிரமணியபுரம் பன்னீர்செல்வம் தெருவைச் சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம். இவருடைய மகன் தினேஷ்ராஜசேகரன் (28). இவர் தென்னூர் பட்டாபிராமன் சாலையிலுள்ள டூவீலர் ஷோரூமில் கலெக்‌ஷன் ஏஜெண்டாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி லாவண்யா (26). இவர்கள் இருவரும் கல்லூரியில் படிக்கும்போதே காதலித்து வந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். தற்போது இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் தம்பதி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்போது, தினேஷ்ராஜசேகரன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி மனைவியை அடிக்கடி மிரட்டி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், தனது குழந்தைக்கு வாழைப்பழம் வாங்கி வரும்படி தினேஷ்ராஜசேகரனிடம், லாவண்யா கூறியுள்ளார். ஆனால் தினேஷ்ராஜசேகரன் வாழைப்பழம் வாங்காமல் மது அருந்திவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தியடைந்த தினேஷ்ராஜசேகரன் சமையல் அறைக்குள் சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து தனது கணவரிடம் இருந்து லாவண்யா கத்தியை பறிக்க முயன்றுள்ளார். ஆனால், அவர் கத்தியை கொடுக்க மறுத்துள்ளார். இதனால் இருவரும் கத்தியை பிடித்துக்கொண்டு மல்லுகட்டியுள்ளனர். அப்போது, லாவண்யா கத்தியை பறித்த வேகத்தில், தனது கணவரின் நெஞ்சில் வேகமாக குத்தியதாக கூறப்படுகிறது.

இதில் ரத்தவெள்ளத்தில் தினேஷ்ராஜசேகரன் மயங்கி சரிந்தார். உடனே, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த கே.கே. நகர் காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணைக்குப் பிறகு லாவண்யாவை காவல் துறையினர் கைது செய்தனர். திருச்சி கே.கே.நகர் காவல் நிலையத்தில் லாவண்யா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் கணவர் தினேஷை மனைவி லாவண்யா வேண்டும் என்றே கொலை செய்தாரா? அல்லது எதிர்பாராத விதமாக நடந்த கொலையா? என்பது குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: என்னா அடி... பெண்ணிடம் செயின் பறித்த வடஇந்திய இளைஞரை வெளுத்துவாங்கிய மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.