திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மேற்கு தொகுதி எம்எல்ஏ கே.என்.நேரு கலந்துகொண்டார்.
மேம்பாட்டு நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்பில், 23 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மூன்று சக்கர சைக்கிள், மடக்கு சக்கர நாற்காலி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.என்.நேரு, "மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் திருச்சியை இரண்டாவது தலைநகராக்க வேண்டுமென விரும்பினார். ஆனால், தற்போதுள்ள அதிமுக அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜூவும் தங்கள் செல்வாக்கை வளர்த்துக் கொள்வதற்காகவும், வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களிடம் ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காகவே மதுரையை 2ஆவது தலைநகராக்க வேண்டும் என்கின்றனர்.
தலைநகரை உருவாக்க வேண்டுமென்றால் அதன் கட்டமைப்பை உருவாக்க குறைந்தபட்சம் பத்தாயிரம் கோடி ரூபாய் தேவைப்படும். இவர்களால் தலைநகரை உருவாக்க முடியாது. திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சரான பின்பு அப்பணியை செய்வார்" என்றார்.
இதையும் படிங்க: இ-பாஸ் தளர்வால் ஜவுளி விற்பனை அதிகரிப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி!