ETV Bharat / state

மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த பெண்..! வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்ற போலீசார்..! என்ன நடந்தது?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2023, 10:03 PM IST

police forcibly dragged the woman in kovilpatti
மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த பெண் - வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்ற போலீசார்

police forcibly dragged the woman in kovilpatti: கந்துவட்டி பிரச்சினை தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த பெண் மற்றும் வழக்கறிஞர் ஆகியோரை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்ற சம்பவம் கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த பெண் - வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்ற போலீசார்

தூத்துக்குடி: கோவில்பட்டி‌ கிருஷ்ணா நகரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்காளர் பட்டியல் சேர்க்கை சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கலந்து கொண்டார். இந்த நிலையில், கந்து வட்டி பிரச்சினை தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க கடம்பூர் பகுதியைச் சேர்ந்த ராணி மற்றும் காங்கிரஸ் கட்சி முன்னாள் வடக்கு மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் அய்யலுச்சாமி ஆகியோர் ஒரு ஆட்டோவில் வந்து உள்ளனர்.

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் இருவரையும் தடுத்து நிறுத்தினர். ராணி கந்துவட்டியால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், கடம்பூர் காவல் நிலைய போலீசார் கந்து வட்டிக் கும்பலுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும், இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்கு மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் போலீசாரிடம் கேட்டனர்.

ஆனால் காவல்துறை இருவரையும் மாவட்ட ஆட்சியரிடம் பேச விடாமல் தடுத்து நிறுத்தியது மட்டுமின்றி, வலுக்கட்டாயமாக இருவரையும் ஆட்டோவில் ஏற்ற முயன்றனர். ஆட்டோவில் ஏற வழக்கறிஞர் அய்யலுச்சாமி மறுத்ததால், போலீசார் அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று ஆட்டோவில் ஏற்றி கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதனை அடுத்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில், மனுக்களைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், அவர்களது அலுவலகத்தில் தான் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருவரையும் சிறிது நேரத்தில் விடுவித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினரின் தரப்பில், கந்து வட்டி பிரச்சினை தொடர்பாக பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் ராணி, மாவட்ட ஆட்சியர் முன்பு தீக்குளிக்க உள்ளதாக தகவல் கிடைத்ததால், வேறு ஏதும் பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருவரையும் சம்பவ இடத்தில் இருந்து அப்புறப்படுத்தியதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் வருது மழை... 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.