ETV Bharat / state

மீண்டும் வருது மழை... 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2023, 8:01 PM IST

Chance of heavy rain in 18 districts tomorrow
நாளை 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Heavy Rain Warning: தமிழகத்தில் நாளை (டிச.09) நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தென் மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை: தமிழகத்தில் நாளை (டிச. 09) ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகத் தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென் மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், இந்த மாதம் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வடகிழக்கு பருவமழை: தமிழகம், புதுச்சேரி ஆகிய இடங்களில், கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 8ஆம் தேதி வரை பெய்த வடகிழக்கு பருவ மழையின் அளவு என்பது 375.3மி.மீ ஆகும். இந்த காலகட்டத்தில் இயல்பான அளவு என்பது 387.7 மி.மீ ஆகும் இது இயல்பை விட 3 சதவீதம் குறைவு. மேலும் சென்னையில், அக்டோபர் 1ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை 1078.2 மி.மீ மழை அளவு பதிவாகி உள்ளது.

இந்த காலகட்டத்தில் இயல்பான அளவு என்பது 718.5 மி.மீ ஆகும். இது இயல்பை விட 50% சதவிகிதம் அதிகம். மேலும் தமிழகத்தில், அரியலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், திருவண்ணாமலை, திருச்சி, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இயல்பான அளவை விடக் குறைவாகத் தான் மழைப் பதிவாகி உள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகரில்... சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணிநேரத்தில்... தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழைப் பதிவாகி உள்ளது. புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்சமாக, கோவை மாவட்டம் பெய்யநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையத்தில் தலா 9 செ.மீ மழைப் பதிவாகி உள்ளது. இதேபோல் திருப்பூர், நீலகிரி, கடலூர், திருநெல்வேலி, தேனி, கரூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழைப் பதிவாகி உள்ளது.

அரபிக்கடலில் கீழடுக்கு சுழற்சி: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், அரபிக்கடல் பகுதிகளில் டிசம்பர் 10ஆம் தேதி வரை தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னை வேளச்சேரியில் 50 அடி பள்ளத்தில் சிக்கிய இருவரின் உடல் மீட்பு.. மேலாளர், மேற்பார்வையாளர் இருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.