ETV Bharat / state

நெல்லையில் ஆர்வமுடன் வாக்கு செலுத்தி வரும் வேட்பாளர்கள்!

author img

By

Published : Apr 6, 2021, 8:21 AM IST

திருநெல்வேலி
திருநெல்வேலி

திருநெல்வேலி: மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி ஆகிய ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் திட்டமிட்டபடி வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல்.06) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சட்டப்பேரவைத் தொகுதிகள்

நெல்லை மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி ஆகிய ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் திட்டமிட்டபடி வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

வாக்காளர்கள்

நெல்லை மாவட்டத்தில் ஆண்கள் ஆறு லட்சத்து 64 ஆயிரத்து 627 பேர், பெண்கள் ஆறு லட்சத்து 93 ஆயிரத்து 417 பேர், மூன்றாம் பாலினத்தவர் 104 பேர் என மொத்தம் 13 லட்சத்து 58 ஆயிரத்து 148 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்குச்சாவடி மையங்கள்

மாவட்டம் முழுவதும் 735 மையங்களில் ஆயிரத்து 924 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இவற்றில் 309 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பு பணிகள்

மொத்தமுள்ள ஆயிரத்து 924 வாக்குச்சாவடிகளிலும் ஒன்பதாயிரத்து 236 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு பணிகளுக்காக மாவட்டம் முழுவதும் மொத்தம் மூன்றாயிரத்து 700 காவலர்களும், 900 துணை ராணுவப்படையினரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்சமயம் கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உரிய பாதுகாப்பு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக தேர்தல் அலுவலர்களுக்கு பாதுகாப்பு கவச உடைகளும் வாக்காளர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்தல், கிருமிநாசினி, முகக் கவசங்கள் வழங்குதல் உள்பட பத்து பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் வாக்காளர்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கும் பாதுகாப்பு கவச உடை அணிவதற்காக வாக்குச்சாவடிகளில் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை 7 மணி முதல் தொடர்ந்து பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

வாக்கு செலுத்திய வேட்பாளர்கள்

வேட்பாளர்களைப் பொருத்தவரை திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாகக் கருதப்படுகின்றனர். இவர்கள் இருவரும் பாளையங்கோட்டை மகராஜ நகரில் உள்ள தனியார் பள்ளியில் தங்கள் வாக்கினை செலுத்துகின்றனர்.

அதேபோல் பிற அதிமுக, திமுக வேட்பாளர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் தங்கள் வாக்கினை செலுத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, பாளையங்கோட்டை புனித ஜான்ஸ் பளளியில் முன்னதாக வாக்கு செலுத்தினார்.

கண்காணிப்பு பணிகள் தீவிரம்

மாவட்டத்தில் உள்ள 50 விழுக்காடு வாக்குச்சாவடிகள் வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும் பதட்டமான 309 வாக்குச்சாவடிகளில் கூடுதல் துணை ராணுவப்படையினர் நிறுத்தப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் காவல் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

அதேபோல் ஒட்டுமொத்த வாக்குச்சாவடிகளையும் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தேர்தல் ஆணையம் அறிவித்தபடி இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவிருப்பதால் அதறகான விரிவான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

இதையும் படிங்க: ஜனநாயகக் கடமையாற்ற ஸ்டாலின் வருகை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.