ETV Bharat / state

கோடை வெயிலுக்கு மத்தியில் சென்னையை குளிர்வித்த கோடை மழை; மக்கள் மகிழ்ச்சி! - CHENNAI RAIN TODAY

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 16, 2024, 1:53 PM IST

Chennai Rain: சென்னை மக்களை கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், திடீரென இன்று காலை நேரத்தில் அங்கு பெய்த மழையால் குளிர்மையான சூழல் நிலவுகிறது. இதனால் மாநகர மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மழை பெய்தது போன்ற படம்
மழை பெய்தது போன்ற படம் (Credits = ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், இன்றைய தினம் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையில் 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், எண்ணூர், திருவெற்றியூர், காசிமேடு, அண்ணா சாலை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அசோக் நகர், வடபழனி உள்ளிட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

இதன் பயனாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. சென்னை மக்களை கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், திடீரென இன்று காலை நேரத்தில் பெய்த மழையால் மாநகர மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: அடுத்த 3 மணி நேரத்திற்கு ஆரஞ்சு அலர்ட்.. "கவனமா இருங்க"- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! - Rain Alert

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.