ETV Bharat / state

"நாடாளுமன்றம் ஒரு பொம்மையாக மாறி முழு அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு செல்ல நேரிடலாம்" - திருச்சி சிவா பரபரப்பு பேச்சு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2023, 2:28 PM IST

திருச்சி சிவா பேச்சு
திருச்சி சிவா பேச்சு

Trichy siva: நாடாளுமன்றம் என்பது ஒரு பொம்மையாக மாறி அனைத்து அதிகாரங்களும் குடியரசு தலைவருக்கு போக நேரிடலாம் என்றும் இது கற்பனை அல்ல, கணிப்பு என்றும் திமுக எம்பி திருச்சி சிவா கருத்து தெரிவித்துள்ளார்.

திருச்சி சிவா

தஞ்சாவூர்: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா மாபெரும் சிறப்புப் பட்டிமன்றம் நேற்று (செப்.25) தஞ்சாவூர் மாநகராட்சி திடலில் நடைபெற்றது. காலங்களைக் கடந்து கலைஞர் வாழ்வதற்கு பெரிதும் காரணம் 'இலக்கியப் பணியே, அரசியல் பணியே' என்ற தலைப்புகளின் கீழ் பட்டிமன்றம் நடைபெற்றது.

இதில் திமுக கொள்கை பரப்பு செயலாளரும், மாநிலங்களவை குழு தலைவருமான திருச்சி சிவா கலந்து கொண்டு பட்டிமன்றத்தை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். பின்னர் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவரும், கொள்கை பரப்பு செயலாளருமான திண்டுக்கல் லியோனி நடுவராக இருந்து பட்டிமன்றத்தை நடத்தி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் எம்பி திருச்சி சிவா பேசுகையில்,"இன்னும் எத்தனை 100 ஆண்டுகள் ஆனாலும் அண்ணாவின் பெயர் சொல்லாமல் தமிழகத்தில் அரசியல் கிடையாது. இன்றைக்குக் கூட்டணி உருவாகிவிட்டது, சிதறிக் கிடந்த கூட்டணிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு குடையின் கீழ் 'இந்தியா' என்ற பெயரோடு நிமிர்ந்து நிற்கிறது.

2024 தேர்தல் எப்போதும் நடைபெறுகின்ற தேர்தல் அல்ல, இந்தத் தேர்தலில் மட்டும் கொஞ்சம் ஏமாந்து போவேமேயானால் இந்திய நாட்டின் ஜனநாயகம் என்ன ஆகுமோ தெரியாது. இந்த நாட்டின் அரசியல் சட்டம் இன்னும் என்னவெல்லாம் சீர்குலைக்கப்படுமோ தெரியாது.

அடிப்படை கோட்பாடுகளான மதச் சார்பின்மை, கூட்டாட்சி, என்பதெல்லாம் மெல்ல மெல்ல இப்போது நலிந்து கொண்டிருக்கிறதே, இல்லாமல் போகுமோ என்ற அச்சம் வரும். நாடாளுமன்றம் என்பது ஒரு பொம்மையாக மாறி எல்லா அதிகாரங்களும் குடியரசுத் தலைவருக்கு போக நேரிடலாம். இது எங்களுடைய கற்பனை அல்ல, கணிப்பு.

நடக்கின்ற நிகழ்வுகளை வைத்து அனைவரும் விழிப்புடன் இருங்கள், தமிழ்நாட்டின் ஒவ்வொரு தனி மனிதனுடைய வாக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக, இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக என்ற நிலை வர வேண்டும். உலகத்தின் தலைசிறந்த ஜனநாயக நாடு இந்தியா என்ற நிலை எதிர்காலத்தில் வினாக்குறியாக மாறக்கூடிய அச்சம் இருக்கிறது.

அதற்கான சட்டங்கள் வரிசையாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது. இன்றிலிருந்து நீங்கள் தேர்தலுக்கு தயாராக வேண்டும், மக்களுக்கு சொல்ல வேண்டும், இது வெறும் சாதாரண தேர்தல் அல்ல, பாரதிய ஜனதாவுக்கு மறைமுகமாக, எல்லா வகையிலும் துணை நின்ற அதிமுகவும், பாரதிய ஜனதாவும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறக் கூடாது.நம்முடைய கூட்டணி தான் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக உங்கள் உழைப்பு தொடங்கிட வேண்டும், வெற்றியைத் தொடுவோம்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் திமுக எம்பி பழநிமாணிக்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரசேகரன், நீலமேகம், மாநில இலக்கிய அணி செயலாளர் கலைராஜன், தஞ்சை மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம்பூபதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: அவதூறு கருத்து! ஆர்.பி.வி.எஸ்.மணியன் ஜாமீன் மனு தள்ளுபடி! சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.