ETV Bharat / state

தேவர் ஜெயந்தி: தென்காசியில் திரளான பொதுமக்கள் குருதி கொடை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2023, 8:18 PM IST

தென்காசியில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு இரத்ததான மற்றும் மருத்துவ முகாம்  நடைபெற்றது
தென்காசியில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு இரத்ததான மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது

Devar Jayanthi: தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சிங்கப்பெண்கள் இரத்ததான கழகம், ப்ரோ விஷன் கண் மற்றும் விழித்திரை மையம் இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான மற்றும் மருத்துவ முகாம் தென்காசியில் சிறப்பாக நடைபெற்றது.

தென்காசி: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 -வது ஜெயந்தி விழா இன்று (அக்.30) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் தலைமையில், பிரித்தானிய அரசை எதிர்த்த இந்தியத் தேசிய இராணுவத்திற்கு, தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலை சிறந்த பேச்சாளராகவும், ஆன்மிகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை, அரசு விழாவாகத் தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது.

இந்த விழா பசும்பொன்னில் மூன்று நாட்கள் கோலாகலமாக நடைபெறும். அந்த வகையில், இன்று தென்காசி மாவட்டம் கீழப்புலியூரில் உள்ள பகுதியில், சிங்கப்பெண்கள் இரத்ததான கழகம், தென்காசி அரசு தமைமை மருத்துவமனை, ப்ரோ விஷன் கண் மற்றும் விழித்திரை மையம் இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான மற்றும் மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.

இம்முகாமில் பங்கேற்ற வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனர் பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில துணைத்தலைவர் ஆனந்தனுக்கு, ஊர் பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து அவர், இரத்ததான முகாமினை துவக்கி வைத்தார்.

இந்த மாபெரும் மருத்துவ முகாமில், கீழப்புலியூரை சுற்றியுள்ள சுமார் 209க்கும் மேற்பட்ட கிராமத்திலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும், எண்ணற்ற இளைஞர்கள் தங்களின் குருதியை கொடையாக வழங்கினர். பின்னர் மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டு பிரஷர், சுகர் மற்றும் விழித்திரை போன்ற நோய்களுக்கு இலவசமாக சிகிச்சைகளும் வழங்கப்பட்டது.

பின்னர் நிகழ்வில் பங்கேற்ற சிறப்பு அழைப்பாளர்களுக்கும், குருதியை தானமாக வழங்கிய பொதுமக்களுக்கும், மரக்கன்று, சிங்கப் பெண்களுக்கான கெளரவ விருது மற்றும் நினைவு பரிசு உள்ளிட்டவை, சிங்கப் பெண்கள் சார்பாக வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கீழப்புலியூர் மட்டுமல்லாமல் தென்காசி பட்டக்குறிச்சி, சுந்தரபாண்டியபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், ஏராளமான இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். மேலும், தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, பெண்களே இரத்ததான முகாமையும், மருத்துவ முகாமையும், சிங்கப்பெண்கள் குழுவாக சேர்ந்து வெகு சிறப்பாக நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திண்டுக்கல் நத்தத்தில் சூடுபிடித்துள்ள ரெடிமேட் ஆடைகள் உற்பத்தி.. தொழிலாளர்கள், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.