ETV Bharat / state

அண்ணாமலைக்கு 'மெக்கா மதீனா' புகைப்படம், தக்காளி மாலை அன்பளிப்பு - பாதயாத்திரையில் ருசிகர சம்பவங்கள்!

author img

By

Published : Aug 3, 2023, 7:59 PM IST

Muslim
அண்ணாமலை

'என் மண், என் மக்கள்' என்ற முழக்கத்தோடு தமிழ்நாட்டில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, புதுக்கோட்டையில் பாஜகவைச் சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் மெக்கா, மதீனா புகைப்படத்தை அன்பளிப்பாக வழங்கினார். அதேபோல் பாஜக தொண்டர் ஒருவர் தக்காளி மாலையை அண்ணாமலைக்கு பரிசாக வழங்கினார்.

அண்ணாமலைக்கு 'மெக்கா மதீனா' புகைப்படம், தக்காளி மாலை அன்பளிப்பு - பாதயாத்திரையில் ருசிகர சம்பவங்கள்!

புதுக்கோட்டை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை "என் மண், என் மக்கள்" எனும் பெயரில் தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அண்ணாமலை கடந்த 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இந்த நடைபயணத்தைத் தொடங்கினார். இந்த பாதயாத்திரையை மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா தொடங்கி வைத்தார்.

யாத்திரையின் 6வது நாளாக நேற்று(ஆகஸ்ட் 2) புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் மற்றும் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்தார். திருமயம் பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், தான் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து 7வது நாளாக இன்று(ஆகஸ்ட் 3) புதுக்கோட்டையில் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மங்களாபுரம் அரிமளம் விளக்குப் பகுதியில் அண்ணாமலை தனது நடைபயணத்தைத் தொடங்கினார். அம்புலி ஆற்றுப் பாலம், சந்தைப்பேட்டை, வடகாடு முக்கம், அரசமரம் உள்ளிட்டப் பகுதிகள் வழியாக நடந்து சென்று காமராஜர் சிலை அருகே வாகனத்தில் ஏறி உரையாற்றினார்.

இந்த பாத யாத்திரையின்போது அம்புலி ஆற்றுப் பாலத்தின் அருகே பாஜவைச் சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் அண்ணாமலைக்கு மெக்கா மதீனா புகைப்படத்தை அன்பளிப்பாக வழங்கினார். அதனைப் பெற்றுக் கொண்ட அண்ணாமலை, அந்த இஸ்லாமியருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து வழிநெடுகிலும், மாலை மற்றும் சால்வை அணிவித்து பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நடைபயணத்தின்போது ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், 55 ஆண்டுகளாக 10,023 உடல்களை தனது காரில் இலவசமாக ஏற்றிச் சென்று அடக்கம் செய்தவருமான "515 கணேசன்"-ஐ அண்ணாமலை சந்தித்தார். ஆலங்குடியில் உள்ள 515 கணேசனின் இரும்புக் கடைக்குச் சென்ற அண்ணாமலை, அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து கூறியதோடு, அவருக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்வதாகவும் உறுதி அளித்தார். அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

இந்த பாதயாத்திரையின்போது அண்ணாமலைக்கு பாஜக தொண்டர் ஒருவர் தக்காளி மாலையை வழங்கினார். அதனைப் பெற்றுக் கொண்ட அண்ணாமலை அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, அந்த மாலையை மகளிர் அணியினரிடம் வழங்குமாறு கூறினார். இதனையடுத்து அந்த பாஜக தொண்டர் தக்காளி மாலையை மகளிர் அணியைச் சேர்ந்த மூத்த பெண்மணியிடம் வழங்கினார்.

இதையும் படிங்க: மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன்; இருவரின் வியூகம் என்ன..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.