ETV Bharat / state

“கோடநாடு வழக்கில் திமுகவினர் மீது ‘இதனால்’தான் சந்தேகமே” - எடப்பாடி பழனிசாமி தாக்கு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2023, 7:27 PM IST

Etv Bharat
Etv Bharat

கோடநாடு வழக்கில் குற்றவாளிகளுக்கு திமுகவினர் ஜாமீன் அளிக்க வந்ததே சந்தேகம் தருவதாகவும், அதிமுக எந்த கட்சிக்கும் அடிமை கிடையாது என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று (ஆகஸ்ட் 30) சாமி தரிசனம் செய்தார். பின்னர், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக எழுச்சி மாநாட்டில் மிகப்பெரிய ஒத்துழைப்பு வழங்கி, அனைத்து கிராமங்களுக்கும் கட்சியை எடுத்துச் சென்றதற்கு நன்றி தெரிவித்தார். மதுரையில் அருள்மிகு மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்துவிட்டு உங்களைச் சந்திக்கிறேன் என்றார்.

அப்போது, கோடநாடு கொலை வழக்கு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, சட்டப்பேரவையில் நான் கேள்வி எழுப்பியபோது, ஏன் முதலமைச்சர் அமைதியாக இருந்தார் எனவும், அதிமுக ஆட்சியின்போது நடந்ததை மட்டும் குறிப்பிட்டு பேசி வேண்டுமென்றே அவதூறு செய்தியை பரப்புவதாக குற்றம் சாட்டினார்.

நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இவ்வழக்கு குறித்து சட்டப்பேரவையிலும் பேசி உள்ளதாகவும், குற்றவாளியை கைது செய்தது அதிமுகதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வழக்கு தங்கள் (அதிமுக) ஆட்சியின் போதுதான் நடைபெற்றதாகவும், குற்றவாளிகளுக்கு வாதாடுவதற்காக இருந்தது, திமுக வழக்கறிஞர் என்றும் கூறினார். அப்போது குற்றவாளிகளுக்கு திமுகவினர் ஜாமீன் தருவதாக இருந்ததுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றார்.

இந்த குற்றவாளிகள் ஏற்கனவே கேரளாவில் கொடும் குற்றம் புரிந்தவர்கள் என்றும், அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும், இவர்களுக்கு ஏன் திமுகவினர் ஜாமீன் வாங்க வேண்டும் என அவர் கேள்வியெழுப்பினார். கரோனாவால்தான் காலதாமதம் ஆனதாகவும், இவ்வழக்கு 90 சதவீதம் முடிந்ததாக தகவல் என்றும் கூறினார்.

வேறு வழி இல்லாமல் எங்கள் மீது எந்த குற்றமும் சுமத்த முடியாததால் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக அடிக்கடி வெளியிடும் குற்றச்சாட்டுகளைக் கண்டு நாங்கள் பதறவில்லை எனவும், ஜாமீன் தர ஏன் விசாரிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போனான்: காவிரி விவகாரம் குறித்த கேள்விக்கு, உச்ச நீதிமன்றத்தில் முழுமையான தீர்ப்பை நாங்கள் பெற்றோம் என்றும், ஒவ்வொரு மாதமும் குறிப்பிடப்பட்ட டிஎம்சி தண்ணீரை திறக்க வேண்டும் என்ற உத்தரவைப் பெற்றது, அதிமுக அரசு என்று பெருமிதம் கூறினார்.

மேலும், அவர் கூறுகையில், “விவசாயிகளுக்காக 22 நாட்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை முடக்கினார்கள். 'INDIA' என்ற கூட்டணியின் நோக்கம் என்ன? தமிழகத்தைக் காப்பாற்ற முடியவில்லை இந்தியாவை காப்பாற்றுகிறார். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போனான் எனும் பழமொழியை போல் உள்ளது” என்றார்.

அதிமுக எந்த கட்சிக்கும் அடிமை கிடையாது: நீதிமன்ற தீர்ப்பைக் கேட்டு வாங்குவதற்கு முதலமைச்சர் தயங்குவதாகவும், அதிமுக எந்த கட்சிக்கும் எப்போதும் அடிமை கிடையாது என்றும், திமுகதான் அடிமையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், திமுகவில் குடும்பத்தை சேர்ந்தவர்கள் வரவேண்டும் எனவும் அக்கட்சிக்கு மக்கள் மீது அக்கறை இல்லை என்றும் கூறினார்.

நானும் டெல்டாகாரன் - கருகிய நெற்பயிர்களுக்கு எடுத்த நடவடிக்கை என்ன?: மக்களுக்காக விவசாயிகளுக்காக நீரை பெற்றுக் கொண்டிருந்தால் மக்கள் பாராட்டி இருப்பார்கள் எனத் தெரிவித்த அவர், முதலமைச்சர் 'நானும் டெல்டாகாரன்' என்று கூறியது கேட்பதற்கு நன்றாக இருப்பதாகவும் ஆனால், நெற்பயிர்கள் கருகியதற்கு என்ன தீர்வு கண்டனர் ? எனக் கேள்வியெழுப்பினார்.

சூழலுக்கு ஏற்றவாறு கூட்டணி மாறும்: பாஜக அதிமுக கூட்டணி குறித்த கேள்விக்கு, 'பாஜக தீண்டத்தகாத கட்சியா? 1999-ல் பாஜகவுடன் திமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்றதாகவும், சுயநினைவு இல்லாதபோது முரசொலி மாறன் இலாகா இல்லாத அமைச்சராக இருந்ததாகவும் கூறினார். இவ்வாறு அரசியலில் சூழலுக்கு ஏற்றவாறு கூட்டணி அமையும் என்ற எடப்பாடி பழனிசாமி, கூட்டணி வேறு; கொள்கை வேறு என்றார். கூட்டணியில் இருந்தாலும் தமிழ்நாட்டின் பிரச்னைகள் வரும்போது உரிமையை நிலைநாட்டினோம் என்றார்.

என் மீது கூட ரூ.4800 கோடி ஊழல் வழக்கு இருந்ததாகவும், அதை உச்சநீதிமன்றத்தில் நடத்தி தீர்ப்பை பெற்றதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். திமுகவினரைப் போல, நெஞ்சுவலி என்று நான் போய் படுக்கவில்லை எனவும், திமுகவினர் மீது 15 ஆண்டு காலம் விசாரிக்கப்படாத வழக்கு உள்ளதாகவும், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் திமுக வழக்கறிஞர் இவ்வழக்குகளை எடுத்து நடத்தி விடுதலை பெற்றதாகவும் குற்றம்சாட்டினார்.

காங்கிரஸ் ஆட்சியில் 'நீட் அரக்கன்': மேலும் சட்டமன்றத் தேர்தலின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறிவிட்டு, தற்போது நீட் தேர்வை ரத்து செய்ய ரகசியம் உள்ளதாக கூறுவதாக அவர் விமர்சித்தார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு; வந்த பிறகு ஒரு பேச்சு. 2010-ல் காங்கிரஸ் கட்சியின் போது தான் நீட் அரக்கன் கொண்டுவரப்பட்டதாக குற்றம்சாட்டினார்.

மின் கட்டணத்தை குறையுங்கள்: 2021-ல் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு 27 மாதம் ஆகிவிட்டதாகவும், மக்களிடம் எதிர்ப்பு வந்த காரணத்தால் வழங்குவோம் என்று கூறுவதாக குற்றம் சுமத்தினார். மேலும் பேசிய அவர், பத்திரப்பதிவை உயர்த்தி உள்ள திமுக அரசிடம், மின் கட்டணத்தை குறைக்க சொல்லுங்கள் என்று கூறினார்.

இதையும் படிங்க: Rahul Gandhi: "சீனாவின் சர்ச்சைக்குரிய வரைபடம் பற்றி பிரதமர் விளக்கமளிக்க வேண்டும்" - ராகுல்காந்தி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.