ETV Bharat / bharat

Rahul Gandhi: "சீனாவின் சர்ச்சைக்குரிய வரைபடம் பற்றி பிரதமர் விளக்கமளிக்க வேண்டும்" - ராகுல்காந்தி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2023, 1:42 PM IST

அருணாச்சலப்பிரதேசத்தை இணைத்து சீனா வரைபடம் வெளியிட்டிருப்பது மிகவும் முக்கியமான பிரச்சினை என்றும், இது தொடர்பாக பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Rahul Gandhi
Rahul Gandhi

டெல்லி: சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே எல்லைப் பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலப் பிரதேசம், சீனாவின் எல்லைக்கு அருகில் உள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் எல்லை சீனாவின் எல்லையை ஒட்டியுள்ளது.

இதனால், அருணாச்சலப்பிரதேசத்தின் எல்லைப் பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அருணாச்சலப்பிரதேசத்தை 'தெற்கு திபெத்' என்றும், கடந்த 1962ஆம் ஆண்டு போரின்போது இந்தியாவிலிருந்து ஆக்கிரமித்த பகுதிகளை 'அக்சாய் சின்' பகுதி என்றும் கூறி வருகிறது.

சீனா அருணாச்சலப்பிரதேசத்தை பெயரளவில் மட்டும் சொந்தம் கொண்டாடவில்லை, பல பகுதிகளை ஆக்கிரமித்து கட்டுமானம் கட்டுவது, ராணுவ முகாம்கள் அமைப்பது போன்ற வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றது. எல்லைப் பிரச்சினைகளை தீர்க்க இருநாடுகள் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்தபோதும், அவ்வப்போது எல்லைப் பகுதிகளில் சீனாவின் அத்துமீறலால் பதற்றங்கள் நிலவி வருகின்றன.

கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு இந்த எல்லைப் பதற்றங்கள் அதிகரித்துவிட்டன. கடந்த 2021ஆம் ஆண்டு, அருணாச்சலப்பிரதேச எல்லையில் சீனாவின் கட்டுமானங்கள் இருப்பதாக செயற்கைக்கோள் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த புகைப்படத்தின்படி, இந்தியாவின் மெய்யான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LAC)-க்கும் சர்வதேச எல்லைக்கும் இடையே உள்ள சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா ஏராளமான வீடுகளை கட்டிருந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, அருணாச்சலப்பிரதேசத்தை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் இணைய சேவை கொண்டு வருவது, சாலை போடுவது உள்ளிட்ட பல்வேறு செயல்களில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், அருணாச்சலப்பிரதேசத்தை இணைத்து சீனா புதிய அதிகாரப்பூர்வ வரைபடத்தை கடந்த 28ஆம் தேதி வெளியிட்டது. அதில், அருணாச்சலப் பிரதேசம் மட்டுமல்லாமல், அக்சாய் சின் பகுதி, தைவான் மற்றும் சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதிகளையும் தங்களுடையது என சீனா உரிமை கோரியுள்ளது.

சீனா வெளியிட்ட இந்த வரைபடம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது போல அபத்தமாக உரிமை கோருவதால் மற்ற நாடுகளின் நிலப்பகுதியை சொந்தமாக்கிவிட முடியாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். மேலும், இந்தியாவின் எல்லை எது என்பதில் தாங்கள் தெளிவாக இருப்பதாகவும், அதனைக் காப்பாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுப்போம் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, "சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து நான் பல ஆண்டுகளாக கூறி வருகிறேன். நான் இப்போதுதான் லடாக்கில் இருந்து திரும்பினேன். லடாக்கில் ஒரு அங்குல நிலம் கூட ஆக்கிரமிக்கப்படவில்லை என பிரதமர் மோடி கூறியது முற்றிலும் பொய்.

இந்திய எல்லையில் சீனா அத்துமீறி ஊடுருவியது லடாக் மக்கள் அனைவருக்கும் தெரியும். மேலும், சீனா வரைபடம் வெளியிட்டது ஒரு தீவிரமான பிரச்சினை. அவர்கள் நமது நிலத்தை ஆக்கிரமித்துள்ளார்கள். இது தொடர்பாக பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: அருணாச்சலப் பிரதேசத்தை இணைத்து புதிய மேப் வெளியிட்ட சீனா.. தைவானுக்கும் உரிமை கோரியதால் சர்ச்சை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.