ETV Bharat / state

முன் விரோதம் காரணமாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ காருக்கு தீ வைப்பு? மதுரை அருகே பதட்டம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2023, 10:22 PM IST

Etv Bharat
Etv Bharat

Madurai Car fire: மதுரையில் முன்னாள் அதிமுக எம்எல்ஏவின் உறவினர்கள் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் சரக்கு வாகனங்கள் எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை: மதுரை மாவட்டம் சத்திரபட்டி அருகே கருவனூர் கிராமத்தில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரான பொன்னம்பலம் அவரது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 2001 - 2006ஆம் ஆண்டுகளில் சமயநல்லூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக பதவி வகித்தார்.

இந்நிலையில், பொன்னம்பலத்தின் சொந்த ஊரான கருவனூரில் உள்ள பாறை கருப்பசாமி கோயிலின் உற்சவ விழா கடந்த ஜூன் மாதம் நடந்தது. அப்போது கோயிலில் மரியாதை அளிப்பதில் கருவனூர் திமுக கிளைச் செயலாளர் வேல்முருகன் தரப்பினருக்கும், முன்னாள் எம்எல்ஏ பொன்னம்பலம் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பொன்னம்பலத்தின் வீடு அடித்து நொறுக்கப்பட்டு, அவருடைய கார் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது.

இது தொடர்பாக சத்திரபட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து முன்னாள் எம்எல்ஏ பொன்னம்பலம், அவரது இரு மகன்கள் ஆகிய 3 பேர் மற்றும் திமுக கிளைச் செயலாளர் வேல்முருகன், செந்தமிழன், ராஜமோகன் ஆகிய 3 பேர் என 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் பொன்னம்பலத்தின் தரப்பினர் ஜாமீனில் வெளிவந்தனர். ஆனால், வேல்முருகன் தரப்பினருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

இந்நிலையில், கருவனூர் கிராமத்தில் நேற்று (செப் 13) இரவு அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொன்னம்பலத்தின் உறவினர்களான பிரபு மற்றும் வேலுமணி ஆகியோரின் வீடுகள் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் சரக்கு லாரிகள் மீது மர்ம நபர்கள் திடீரென இரவில் தீ வைத்து விட்டுச் சென்றுள்ளனர்.

இதன் காரணமாக வாகனங்களில் தீ மளமளவென பரவத் தொடங்கியது. இதில் கார் மற்றும் சரக்கு வாகனம் ஆகியவை முழுமையாக எரிந்த நிலையில், மற்றொரு கார் மீதும் லேசாக தீ பரவி சேதம் ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் கார் மற்றும் சரக்கு வாகனம் எரிந்தது. இச்சம்பவம் குறித்து சத்திரப்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை கருவனூர் கிராமத்தில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து மோதல்கள், கார் எரிப்பு சம்பவங்கள் நீடித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தற்பொழுது கருவனூர் கிராமத்தில் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இதையும் படிங்க: ஆசிரியர் பணிக்கான நியமனத் தேர்வு நடத்தக் கோரி ஆசிரியர்கள் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.