கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூர் அருகே அனந்தபத்மநாபபுரம் கிராமத்தில் ராஜலிங்கம், புஷ்பம் தம்பதியர் தேநீர் கடை நடத்திவருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை நேரத்தில் புஷ்பம் கடையில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த நபர் ஒருவர் புஷ்பத்திடம் தேநீர் கேட்டுள்ளார். அப்போது அந்த நபருக்கு தேநீர் கொடுப்பதற்காக புஷ்பம் கீழே குனிந்து கிளாஸை எடுக்க முயன்றுள்ளார்.
இந்த வேளையில் திடீரென்று புஷ்பத்தை கீழே தள்ளிய அந்த நபர், புஷ்பம் அணிந்திருந்த பத்து சவரன் மதிப்புள்ள மூன்று தங்க சங்கிலிகளை பறித்துக் கொண்டு ஓடியுள்ளர். பின்னர் கடையின் அருகில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்ப செல்ல முற்பட்டுள்ளார். இதனைக் கண்ட புஷ்பம் சத்தமிட அக்கம்பக்தினர் ஓடி வந்து திருடனை பிடிக்க முயன்றனர்.
அப்போது அந்தத் திருடன் தான் வந்த இருசக்கர வாகனத்தை அதே இடத்திலேயே விட்டு தப்பி ஓடினார். இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கு சென்ற ஆரல்வாய்மொழி காவல் துறையினர், திருடன் விட்டுச் சென்ற இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் தேநீர் கடைக்கு எதிரே உள்ள வீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமிரா காட்சியைக் கொண்டு தப்பியோடிய திருடனை தீவிரமாக தேடிவருகின்றனர்.