ETV Bharat / state

கோட்டார் புனித சவேரியார் பேராலய தேர் பவனி நிகழ்ச்சி..திரளான பக்தர்கள் பங்கேற்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2023, 3:58 PM IST

Etv Bharat
Etv Bharat

நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற கோட்டார் புனித சவேரியார் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.

கோட்டார் புனித சவேரியார் பேராலய தேர் பவனி நிகழ்ச்சி

கன்னியாகுமரி: நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் பேராலய திருவிழா கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி, நேற்று (டிச.03) இரவு வெகு விமர்சையாக நடைபெற்றது.

நாகர்கோவிலின் மையப் பகுதியான கோட்டாறு பகுதியில் வரலாற்று சிறப்புகளைக் கொண்ட கோட்டாறு புனித சவேரியார் பேராலயம் உள்ளது. உலகில் புனித சவேரியாருக்கென்று முதன் முதலாக எழுப்பப்பட்ட ஆலயம் என்ற பெருமையுடன் உள்ள பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளுடன் விளங்கும் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தின் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் இறுதியில் துவங்கி, 10 நாட்கள் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நிறைவடையும்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த திருவிழா கடந்த நவம்பர் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் ஆடம்பர கூட்டு திருப்பலி, முதல் திருவிருந்து திருப்பலி, குணமளிக்கும் திருப்பலி, சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர், மலையாள திருப்பலி உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகள் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய அம்சமான தேர் பவனி நிகழ்ச்சி, 10 வது நாளான நேற்று இரவு தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சவேரியார் பேராலயத்திற்கு வந்து வழிபட்டு சென்றனர். மேலும், தேரில் உருண்டு பிராத்தனை செய்யும் நிகழ்சியில் ஏராளமான பெண்கள் கலந்துக்கொண்டு வழிபட்டனர். அதனைத்தொடர்ந்து, 11 வது நாள் திருவிழாவான இன்று (டிச.04) குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருவிழாவிற்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, துத்துக்குடி, மதுரை மற்றும் கேரளாவில் இருந்தும் பல ஆயிரக் கணக்கான மக்கள் வருகை தந்துள்ளனர். திருவிழாவினை முன்னிட்டு இன்று மாலை முதல் நாளை இரவு வரை, நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி வழிதடங்களில் செல்லும் அனைத்து பேருந்துகளும் மாற்று பாதைகளில் இயக்கபட்டன. திருவிழாவினையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

வரலாறு: புனித சவேரியார் 450 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் 1542 ஆம் ஆண்டு கோவாவிற்கு வந்து சமய பணிகள் ஆற்றியுள்ளார். பின் இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கு சென்றாலும் அவர் வாழ்ந்தது கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு ஆகும். 1552 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி சீனாவிற்கு செல்லும் வழியில் சான்சியன் தீவில் கடுமையான காய்சலால் பாதிக்கபட்டு இயற்கை எய்தியுள்ளார். பதப்படுத்தப்பட்ட அவர் உடல் இன்றும் கோவாவில் இயேசு ஆலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து, கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றி வந்த மக்கள் சவேரியாருக்கு கோட்டாறில் ஆலயம் எழுப்பினர். அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த பேராலயமாக தரம் உலகம் முழுவதும் பிரசித்து பெற்றது. ஸ்பெயின் நாட்டில் பிறந்த சவேரியாருக்கு கோட்டாறில் அமைக்கப்பட்டுள்ள ஆலயமே, உலகில் சவேரியாருக்காக எழுப்பப்பட்ட முதல் ஆலயம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கத் தேவையான அனைத்து உபகரணங்களும் தயாராக உள்ளது; ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.