ETV Bharat / state

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கத் தேவையான அனைத்து உபகரணங்களும் தயாராக உள்ளது; ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2023, 10:24 AM IST

Commissioner Sandeep Rai Rathore said about the flood rescue operation in Chennai
மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Chennai Michaung Cyclone: வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கப் பயன்படும் படகு, மரம் அறுக்கத் தேவைப்படும் உபகரணம் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் உள்ளது என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்தார்.

சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பேட்டி

சென்னை: வங்கக்கடலில் டிசம்பர் 2ஆம் தேதி நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (டிச.3) மிக்ஜாம் புயலாக வலுப்பெற்றது. தற்போது இந்த புயலானது இன்று (டிச.4) தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கரையோர பகுதிகளில் நிலவும் என்றும் கூறப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாகப் பல இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மண்டலம் அறிவித்திருந்தது.

அதன்படி இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மிக்ஜாம் புயலானது தற்போது சென்னைக்கு கிழக்கே 130 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதால், மேலும் வடக்கு - வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தீவிரமடைய வாய்ப்புள்ளது. இந்த மிக்ஜாம் புயலானது நாளை (டிச.5) நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னை பெருநகர மாவட்ட பேரிடர் மீட்புக் குழுவின் பணிகள் குறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உடன் தலைமைச் செயலாளர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே சென்னை பெருநகர மாவட்ட பேரிடர் மீட்புக் குழுவினரைத் தலைமைச்செயலாளர் சிவ் தாஸ் மீனா சந்தித்தார்.

அப்போது சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மீட்பிற்காகப் பயன்படுத்தும் உபகரணங்கள் குறித்தும் மற்றும் அவைகளைச் செயல்படுத்தும் விதம் குறித்தும் தலைமைச் செயலாளரிடம் எடுத்துரைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், "மிக்ஜாம் புயலில் பணிபுரிவதற்காகச் சென்னை காவல்துறை சார்பில் சென்னை பெருநகர மாவட்ட பேரிடர் மீட்பு குழு தயாராக உள்ளது. சென்னை காவல் மாவட்டத்தில் 120 பேர் கொண்ட பேரிடர் மீட்புக் குழு உள்ளது. எதிர்காலத்தில் இவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

சென்னை பெருநகர மாவட்ட பேரிடர் மீட்புக் குழுவினர் அனைவரும் அவசர காலகட்டத்தில் பணியாற்றும் பயிற்சிகளைக் கொண்டவர்கள். அவசர காலத்தில் மக்களைக் காப்பாற்றும் அனைத்து நடவடிக்கையும் மீட்புப் குழுவினர் மேற்கொள்வார்கள். மேலும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கப் பயன்படும் படகு, மரம் அறுக்கத் தேவைப்படும் உபகரணம் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் உள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: TNPSC Exam Date Change: மிக்ஜாம் புயல் எதிரொலி..! டிஎன்பிஎஸ்சி நேர்முகத் தேர்வு தேதிகளில் மாற்றம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.