திண்டுக்கல்: பழனியில் அடிவாரம் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்துவருபவர் சந்தானகிருஷ்ணன். இவர் நேற்று (பிப்ரவரி 6) இரவு 11 மணியளவில் தாராபுரம் சாலையில் உள்ள ரயில்வேகேட் அருகே உள்ள புதுநகர் சாலையில் அமர்ந்து தனது நண்பர் ஆனந்தன் என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் ஆனந்தனை அரிவாளால் வெட்ட முயன்றனர். அப்போது அருகிலிருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் சந்தானகிருஷ்ணன் தடுக்க முயன்றார். இதில் சந்தானகிருஷ்ணன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து ஆனந்தனை வெட்டிவிட்டு அந்நபர்கள் தப்பியோடினர்.
தகவலறிந்து விரைந்துசென்ற பழனி நகர காவல் துறையினர் இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் பழனி காவல் துணைக் கண்காணிப்பாளர் சத்யராஜ் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
வாயில் வெட்டு விழுந்துள்ளதால் விசாரிப்பதில் பின்னடைவு!
இருப்பினும் சார்பு ஆய்வாளர் சந்தானகிருஷ்ணனுக்குத் தலையிலும், ஆனந்தனுக்கு வாயிலும் வெட்டப்பட்டு இருப்பதால் தொடர்ந்து இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இருவரும் பேச முடியாமல் இருப்பதால் வெட்டியது யார்? எதற்காக வெட்டினர்? எத்தனை பேர் வந்தனர் எனக் காவல் துறையினர் விசாரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இதனையடுத்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்திவருகிறார்.
இதையும் படிங்க:தொடர் கொலை முயற்சிகள்..! : ரேசர் கணேசனை வலை வீசித் தேடும் காவல்துறை