ETV Bharat / state

கோவை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணிகள் தீவிரம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 16, 2023, 6:18 PM IST

Wild Elephants
காட்டு யானைகள் கூட்டம்

Coimbatore Wild Elephants: கோவை அருகே ஊருக்குள் புகுந்துள்ள காட்டு யானைகள் கூட்டத்தை வனப்பகுதிக்கு விரட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மதுக்கரை வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோயம்புத்தூர்: மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட தீத்திபாளையத்தை ஒட்டி உள்ள மலை அடிவார கிராமங்களுக்கு இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் ஊருக்குள் வருவதாக பொதுமக்களால் கூறப்படுகிறது.

இந்த காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களில் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் தரப்பில் வனத்துறையினரிடம் பலமுறை புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 8 யானைகள் கொண்ட கூட்டம் தீத்திபாளையம் கிராமத்திற்குள் புகுந்துள்ளது.

அப்போது அங்கு இருந்த ரேஷன் கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே இருந்த அரிசி, பருப்பு, சர்க்கரை மூட்டைகளை வெளியே எடுத்து போட்டு சாப்பிட்டும், விளைநிலங்களுக்குள் புகுந்து தக்காளி உள்ளிட்ட விவசாயப் பயிர்களை சேதப்படுத்தியதாக பொதுமக்கள் வனத்துறையினரிடம் புகார் தெரிவித்து உள்ளனர்.

அந்தப் புகாரின் அடிப்படையில், வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு மீண்டும் காட்டு யானைகள் கூட்டம் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அய்யாசாமி மலை அடிவாரத்தின் அருகாமையில் உள்ள தோட்டங்களிலும், கிராமப்பகுதிகளிலும் உலா வந்துள்ளது.

இதனால் அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள் மதுக்கரை வனத்துறையினருக்கு மீண்டும் தகவல் தெரிவித்தனர். இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மூன்று குழுக்களாகப் பிரிந்து காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால் கிராமப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் குப்பனூர் பகுதி வழியாகச் சென்று அடர் வனத்துக்கு முன்பாக உள்ள அடர்ந்த புதற்காட்டில் தஞ்சமடைந்துள்ளன. இந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "தற்போது இந்த பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவது வழக்கமாகி உள்ளது. அவ்வாறு ஊருக்குள் வரும் யானைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

விளை நிலங்களை யானைகள் தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, யானைகள் ஊருக்குள் வராமல் இருக்கும் வகையில் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து மதுக்கரை வனத்துறையினர் கூறுகையில், “ஊருக்குள் புகுந்துள்ள காட்டு யானைகளை விரட்டும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், யானைக் கூட்டத்தில் மிகச் சிறிய குட்டி யானை இருப்பதால் அதனை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக” மதுக்கரை வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க:இரட்டைமலை சீனிவாசன் மணி மண்டபத்தைச் சீரமைக்க வேண்டும்: விசிக எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.