ETV Bharat / opinion

இரண்டு ஜாமீன்களின் கதை... கெஜ்ரிவாலுக்கு கிடைத்தது ஹேமந்த் சோரனுக்கு கிடைக்காமல் போனது எப்படி? - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 17, 2024, 2:35 PM IST

Updated : May 17, 2024, 4:11 PM IST

இரண்டு முதலமைச்சர்களின் ஜாமீன் கதை மற்றும் அதில் ஒருவருக்கு கிடைத்த ஜாமீன் மற்றொருக்கு கிடைக்காமல் போனது எப்படி என்பது குறித்து ரித்விகா சர்மா விளக்குகிறார்.

Etv Bharat
Delhi CM Arvind Kejriwal, Former Jharkhand CM Hemant Soren (ANI Photos)

ஐதராபாத்: 2024 ஆம் ஆண்டில் இரண்டு முதலமைச்சர்கள் பண மோசடி குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ராஞ்சியில் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான நிலத்தை சட்டவிரோதமாக வாங்கி விற்பனை செய்ததாக கூறி கைது செய்யப்பட்டார்.

கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி நீண்ட விசாரணைக்கு பின்னர் அமலாக்கத்துறையால் அவர் கைது செய்யபட்டார். கைது செய்யப்படுவதற்கு முன்னதாக ஹேமந்த் சோரன் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கலால் கொள்கை தொடர்பாக ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இந்த இரண்டு முதலமைச்சர்களையும் பணமோசடி மற்றும் அந்நிய செலாவணி சட்டங்களை மீறுவது தொடர்பான குற்றங்களை விசாரிக்கும் அமலாக்கத்துறை கைது செய்து உள்ளது. இதில் இரண்டு முதலமைச்சர்களும் இடைக்கால ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

மக்களவை தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள அனுமதிக்கக் கோரி இரண்டு பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். முன்னதாக இடைக்கால ஜாமீன் கோரி இரண்டு முதலமைச்சர்களும் தாக்கல் செய்த மனுக்களை முறையே டெல்லி மற்றும் ஜார்கண்ட் உயர் நீதிமன்றங்கள் நிராகரித்தன.

இரண்டு முதலமைச்சர்களும் வெவ்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு இருந்தாலும், இருவரும் பண மோசடி மற்றும் அந்நிய செலாவணி சட்டத்தை மீறியது தொடர்பான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இருவரது இடைக்கால ஜாமீன் மனுக்கள் முறையே அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களால் நிராகரிக்கபட்டன.

இப்படி இருவருக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருந்த போதிலும், தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தால் இடைக்கால ஜாமீன் பெற்று விடுதலையாகி உள்ளார். ஆனால் ஹேம்ந்த் சோரனின் சிறை வாசமும், சட்டப் போராட்டமும் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கெஜ்ரிவால் விடுதலையின் ரகசியம் என்ன?

கடந்த மே 10ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மறுதளித்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இது அனைத்திற்கும் காரணம் நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தல் மட்டுமே.

மக்களவை தேர்தலை மனதில் கொண்டு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீனை உச்ச நீதிமன்றம் வழங்கியது. மேலும், உச்ச நீதிமன்றம் தனது குறிப்பில், "நடப்பாண்டின் மிகப் பெரிய நிகழ்வான மக்களவை தேர்தல் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. ஜாமீன் வழங்கும் போது ஒரு நபருடன் தொடர்புடைய இயல்பான தன்மைகளை நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது, அதை புறக்கணிப்பது என்பது அநீதியான செயல் என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், அதற்காக, அரவிந்த் கெஜ்ரிவாலின் நிலைமை ஒப்பிட்டு பார்க்கக் கூடியது அல்ல என்றும் தெரிவித்தது.

மேலும், அரவிந்த் கெஜ்ரிவால் எந்தவித குற்றப் பின்னணியில் தொடர்புடையவர் அல்ல என்பதாலும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள வழக்கில் கூட அவர் தொடர் விசாரணை என்பது உறுதிச் செய்யப்படாமல் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளதை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கியது.

மேலும், ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம், ஜூன் 2ஆம் தேதி அவர் மீண்டும் சரணடைய வேண்டும் என்றும் இதன் இடைப்பட்ட காலத்தில் அவர் முதலமைச்சர் அலுவலகம் மற்றும் டெல்லி தலைமைச் செயலகம் செல்லக் கூடாது என்றும் முதலமைச்சருக்கான எந்த அதிகார்ப்பூர்வ கோப்புகளிலும் கையெழுத்திடக் கூடாது என்றும் நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்தது.

மேலும், இடைக்கால ஜாமீன் காலத்தில், வழக்கில் தொடர்புடையவர்களை சந்திப்பது, ஆதாரங்களை அழிக்க முயற்சிப்பது உள்ளிட்ட எந்த காரியங்களில் ஈடுபடக் கூடாது மற்றும் பொது வெளியில் வழக்கு குறித்த நிலையின் தகவல்களை வெளியிடக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்தது.

ஹேமந்த் சோரனின் விடுதலையாவதில் என்ன சிக்கல்?

மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் மே 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அரவிந்த் கெஜ்ரிவாலை போன்று தேர்தல் பிரசார கோரிக்கையை முன்னிறுத்தி ஹேமந்த் சோரனும் இடைக்கால ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடினார்.

இருப்பினும், அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்க மறுத்த உச்ச நீதிமன்றம், ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு குறித்து பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மே 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. ஆனால் அன்றைய தினமே ஜார்கண்ட் மாநிலத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 3 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறுவதால் வழக்கின் விசாரணையை மே 17ஆம் தேதிக்கு மாற்றக் கோரி ஹேமந்த் சோரன் தரப்பில் முறையிடப்பட்டது.

மேலும், அமலாக்கத்துறையின் கைதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை விசாரித்து தீர்ப்பு அளிப்பதில் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் கால தாமதமாக்கியதாகவும், கடந்த மே 3ஆம் தேதியே இறுதி தீர்ப்பை வழங்கிய நிலையில், அன்று ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் அவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

இருப்பினும், ஹேமந்த் சோரனின் கூக்குரலுக்கு உச்ச நீதிமன்றம் செவிசாய்க்கவில்லை. அவரது இடைக்கால ஜாமீன் கோரிய மனு இன்று (மே.17) விசாரணைக்கு வருகிறது. முக்கியமாக, ஒரு அரசியல்வாதியின் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்கும் திறன் கெஜ்ரிவாலின் விடுதலையை உறுதி செய்தது.

ஆனால் ஹேமந்த் சோரனின் வழக்கில் அவருக்கு விடுதலை கிட்டவில்லை. இந்த இரண்டு நபர்களுக்கும் இடையேயான ஒரு முக்கிய வேறுபாடு என்னவென்றால், கெஜ்ரிவால் தொடர்ந்து முதலமைச்சர் பதவியில் நீடித்த நிலையில், ஹேமந்த் சோரனோ முன்கூட்டியே ராஜினாமா செய்தார். உச்ச நீதிமன்றம் ஏன் ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கவில்லை என்பதை விளக்குவது அல்லது நியாயப்படுத்துவது கடினம்.

பஞ்சாப் அமைச்சருக்கு மாறுபட்ட தீர்ப்பு!

இதனிடையே, பஞ்சாபின் முன்னாள் வனத்துறை அமைச்சர் சாது சிங் தரம்சோட்டுக்கு பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதனால் அவர் மக்களவைத் தேர்தலில் பிரசாரம் செய்ய முடியும். பஞ்சா வனத்துறையில் பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக தரம்சோட் மீது குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.

இருப்பினும், தரம்சோட் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் உத்தரவு மேற்கொள்காட்டப்பட்டு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்பதை சொல்லி புரியவைக்க வேண்டியதில்லை என்பது தான் உண்மை.

இதையும் படிங்க: வெங்காய ஏற்றுமதி தடைக்கான நீக்கம்! கதறும் நேபாளம், ஆனந்த கண்ணீரில் வங்கதேசம்! என்ன காரணம்? - India Lift Onion Export Ban

Last Updated :May 17, 2024, 4:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.