தேனி: தேனி மாவட்டம், சீலையம்பட்டி கிராமத்தில் உள்ள கம்பர் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் நடேசன். இவர் கோவை பீளமேடு இ-2 காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவர் பணிக்காக தனது மனைவி மற்றும் மகள்களுடன் கோவையில் வசித்து வந்தார். இதற்கிடையே, தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் சீலையம்பட்டி கிராமத்திற்கு விடுமுறையில் நேற்று வந்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று வேப்பம்பட்டி சாலையில் உள்ள தனது தோட்டத்திற்குச் சென்று விட்டு வரும் வழியில், திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர், அவரை அவரது உறவினர்கள் விரைந்து சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதைத் தொடர்ந்து, இன்று (வெள்ளிக்கிழமை) அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்வதற்காக அவரது இல்லத்தில் அவரது உடலை வைத்திருந்தனர். இதனையடுத்து, அவரது உடலுக்கு கோவை மண்டல காவல்துறை ஐ.ஜி, எஸ்.பி மற்றும் டி.எஸ்.பிக்கள் உட்பட உயர் அதிகாரிகள் ஏராளமானோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து, தேனி ஆயுதப்படை சார்பு ஆய்வாளர் காளிராஜ் தலைமையில் 12 காவலர்கள், 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை செய்து, அவரின் உடலை நல்லடக்கம் செய்தனர். இதில் கலந்துகொண்ட ஏராளமான போலீசாரும் கண்ணீர் மல்க அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பெண் வழக்கறிஞருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்! - POCSO Charges Quashed