கோவை: ஈச்சனாரி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பல்கலைகழகத்தில் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களை வரவேற்கும் விழா நடைபெற்றது. இதில் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "பொறியியல் படிப்புகளில் நிறைய வாய்ப்புகள் உருவாகி கொண்டு இருக்கிறது. இந்தியாவை நோக்கி நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை மாணவர்களிடம் கொண்டு செல்ல முயன்று இருப்பதாக தெரிவித்தார். குறிப்பாக ஜப்பானில் நிறைய வேலை வாய்ப்பு உருவாக இருக்கின்றது, எனவும் அங்கு இளைஞர்கள் குறைவு என்பதால் அந்த வேலை வாய்ப்புகளை நாம் பயன் படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் கணிணி மட்டுமே முக்கியம் இல்லை மற்ற பொறியியல் துறைகளிலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். கணிணி மட்டுமே என்பதை தாண்டி பிற துறைகளில் வாய்ப்பு இருக்கின்றது. கம்ப்யூட்டர் கோடிங் 5 ஆண்டுகள் கழித்து எப்படி இருக்கும் என்று தெரியாது. பொறியியல் படித்துக் கொண்டால் வாழ்நாள் சிறப்பாக இருக்கும்.
விண்வெளி புரட்சி வருகின்றது செல்போன் டவர் இல்லாத வகையில் செயற்கை கோள்களால் இயக்கும் அடுத்த தலைமுறை கைபேசி வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குலசேகர பட்டணத்தில் அமையும் ஏவுத்தளம் உலகின் மிகச்சிறந்த மையமாக அமையும். வர்த்தக ரீதியில் தினம் தினம் ஏவுகணைகள் அனுப்ப வேண்டிய அவசியம் ஏற்படும், நிலவை நோக்கிய பயணங்கள் பல மாற்றங்களை ஏற்படுத்த போகின்றது.
நிலவில் இருந்து தனிமங்களை சில டன்கள் எடுத்து வந்தாலே அதை வைத்து பெரிய நாடுகளுக்கு எரிசக்தி கொடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. அதற்காக சில கட்டமைப்புகளை நிலவிலும் உருவாக்க முடியும். அதற்கு நிறைய தொழில் நுட்பங்கள் மற்றும் ஆட்கள் தேவையாக இருக்கும். அதற்கு பொறியியல் படித்தவர்கள் அதிகம் தேவைபடுவார்கள் என்பதால் மாணவர்கள் பொறியில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்" என தெரிவித்தார்.
மேலும், 'விண்வெளி படிப்புகள் நிறைய வரவேண்டும் என்பதற்காக முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்திற்கு ஒரு ஸ்டெம் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கிணத்துக்கடவு பள்ளியில் ஸ்டெம் மையம் ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
சந்திரயான் வெற்றியை சர்வதேச நாடுகள் உன்னிப்பாக பார்க்கின்றன. நம்முடைய முயற்சிகள் சிக்கனமாகவும் சிறப்பாகவும் இருக்கின்றது. நிலவில் நீர் இருப்பதையும், துருவப் பகுதியில் சந்திராயன் இறக்கி இருப்பதையும் உன்னிப்பாக கவனிக்கபடுகின்றது.
விண்வெளியின் பருவநிலையை புரிந்து கொள்வதும் முக்கியமாக இருக்கிறது. விண்வெளி துறையை போல விவசாயத்துறையையும் கொண்டு வர வேண்டும். அதை நோக்கிய பயணங்களும் சிறப்பாக இருக்கிறது. விண்வெளிக்கு போய்வரும் தொழில்நுட்பத்தை வைத்து விமான பயணத்தையும் மாற்ற முடியும்.
ராக்கெட் தொழில் நுட்பத்தில் பாதுகாப்பாகவும் விரைவாகவும் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு சென்று வரவும் வாய்ப்புகள் இருக்கிறது. மனிதன் நிலவுக்கு செல்ல பிறநாடுகளுடன் சர்வதேச புரிந்துணர்வு ஒப்பத்துடன் செயல்பட வேண்டும். ஒவ்வொரு நாடும் தனித்தனியாக செல்லாமல் அனைத்து நாடுகளும் ஒன்றாக சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
மேலும், இந்தியா தான் செல்ல வேண்டும் என்பதைத் தாண்டி உலகமே செல்ல வேண்டும் என பார்க்க வேண்டும். நிலவிலேயே விண்வெளி மையம் அமைக்க வேண்டும் எனவும், அதனை சந்திரயான்-3 இறங்கிய இடத்தில் அமைக்க வேண்டும் எனவும் கருத்தை முன்வைத்து இருக்கின்றோம். இதை நோக்கி விவாதங்கள் போய் கொண்டு இருக்கின்றது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: Aditya L1 : இஸ்ரோவுக்கு தொடர் வெற்றி.. ஆதித்யா எல்1 விண்கலத்தின் அப்டேட் என்ன?