கோயம்புத்தூர் நஞ்சுண்டாபுரம் பகுதியில் மார்ச் 4ஆம் தேதி இரவு இந்து முன்னணியின் அமைப்பாளர் ஆனந்த் என்பவர் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கப்பட்டார். தற்போது அவர், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில் இந்து முன்னணியினர் அவரைத் தாக்கியவர்களை உடனடியாகக் கைதுசெய்ய வலியுறுத்தி நேற்று சோமனூர், கருமத்தம்பட்டி கடையடைப்புப் பேராட்டம் நடத்தினர்.
அதைத்தொடர்ந்து இன்றும் இந்து முன்னணியினர் கடையடைப்புப் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்திருந்தனர். இதற்கிடையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகளும் இன்று ஒருநாள் கடையடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, உக்கடம் டவுன்ஹால், காந்திபுரம், ஆர்.எஸ். புரம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளன.
வணிக நிறுவனங்கள், உணவகங்கள் மூடப்பட்டுள்ளதால் சாலை வெறிச்சோடி காணப்படுகிறது. இருதரப்பினர் ஒரேநாளில் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அசம்பாவிதங்களைத் தவிர்க்க அங்கு ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களுடன் அதிவிரைவுத் தடுப்பு, கலவரத் தடுப்புப் படையினர் 200-க்கும் மேற்பட்டோரும் இணைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் தலைமையில் அங்கு கொடி அணிவகுப்பு நடைபெற்றது. அதில், அதிவிரைவு கலவர தடுப்புப் படையினர், மாநகர காவல் துறையினர் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: இந்து முன்னணி பிரமுகர் மீது தாக்குதல்; கோவையில் கடை அடைப்பு