ETV Bharat / state

வீட்டு மனை பதிவுக்கு புதிய விதிமுறைகள் அமலாகிறது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 15, 2023, 9:45 PM IST

புதிய வழிமுறைகளுடன் அமலுக்கு வரும் வீட்டு மனை பதிவு
புதிய வழிமுறைகளுடன் அமலுக்கு வரும் வீட்டு மனை பதிவு

Land Registration new rules in TN: பதிவுத்துறையில் ஜியோ கோ.ஆர்டினேட்ஸோடு (புவியியல் ஆயங்கள்) முறையை வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் அமல்படுத்துகிறது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சென்னை: பதிவுத்துறையில் கட்டடங்கள் இருப்பதை மறைத்து காலி நிலம் என பதிவு செய்வதைத் தடுக்கும் வகையில் ஜியோ கோ.ஆர்டினேட்ஸோடு (புவியியல் ஆயங்கள்) முறையில், இடத்தின் புகைப்படம் எடுத்து இணைக்க வேண்டும் எனவும், இந்த நடைமுறை வருகிற அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமுலுக்கு வருகிறது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

புதிய வழிமுறைகளுடன் அமலுக்கு வரும் வீட்டு மனை பதிவு
புதிய வழிமுறைகளுடன் அமலுக்கு வரும் வீட்டு மனை பதிவு

தமிழ்நாட்டில் போலி ஆவணங்கள் பதியப்படுவதை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆவணங்களை பதிவு செய்யப்படும்போது ஆதார் எண் கட்டாயம் என்றும், ஆதார் எண்கள் சரியாக இருக்க வேண்டும் என்றும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆவணப் பதிவின்போது தரகர்கள் அனுமதியும் தடுக்கப்பட்டுள்ளது. வீட்டுமனைகளை பதிவு செய்யும்போது பல்வேறு முறைகேடுகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசுச் செயலாளர் ஜோதி நிர்மலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பதிவுத்துறையில் போலியான ஆவணங்கள் பதியப்படுவதைத் தடுக்கவும் விடுதல் இன்றி அரசுக்கு வருமானம் வருவதை உறுதி செய்யவும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கட்டடங்கள் இருப்பதை மறைத்து காலி நிலம் என்று ஆவணங்கள் பதியப்படுவதனால் அரசுக்கு வரும் வருவாய் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: முறப்பநாடு விஏஓ கொலை வழக்கு; இருவருக்கு ஆயுள் தண்டனை - தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு!

எனவே, காலி மனையிடங்களை ஜியோ கோ.ஆர்டினேட்ஸோடு (புவியியல் ஆயங்கள்) புகைப்படம் எடுத்து அதனை ஆவணமாக இணைக்க வேண்டும் என கடந்த வாரத்தில் தமிழகத்திலுள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டது.

பதியப்படும் ஆவணத்தில் குறிப்பிடப்படும் சொத்தின் பக்கத்தில் இருக்கும் காலி இடத்தை புகைப்படம் எடுத்து அதனை ஆவணமாக சேர்த்து மோசடி பதிவு செய்யப்படுவதாக புகார்கள் வரப் பெற்றுள்ளன. எனவே, இது குறித்து தீவிரமாக ஆராய்ந்து அரசு புதியதொரு முடிவினை எடுத்துள்ளது.

அதன்படி சார்பதிவாளர் அலுவலகங்களில் பதியப்படும் அனைத்து சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களிலும் அந்த சொத்துக்கள் குறித்த புகைப்படம் ஜியோ கோ.ஆர்டினேட்ஸோடு எடுக்கப்பட்டு அதனை ஆவணமாக இணைக்க வேண்டும் என்று பதிவுத்துறை தலைவருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த கூடுதல் வழிகாட்டுதல்கள் பதிவுத்துறை தலைவரால் தனியே வழங்கப்படும். இந்த நடைமுறையானது எதிர்வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பின்பற்றப்படும்" என குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: "மகளிர் உரிமைத் தொகை உள்ளவரை ஸ்டாலின் ஆட்சி தான்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.