ETV Bharat / state

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை உயிரினங்கள்! சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டது எப்படி?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2023, 5:44 PM IST

Etv Bharat
Etv Bharat

Chennai Airport: தாய்லாந்து நாட்டிலிருந்து 40க்கும் மேற்பட்ட அரிய வகை உயிரினங்களை விமானம் மூலம் சென்னைக்கு கடத்திவந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

சென்னை: தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்வேஸ் பயணிகள் விமானம் நேற்று நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது சென்னையைச் சேர்ந்த சுமார் 30 வயதுடைய ஆண் பயணி ஒருவர் இரண்டு பெரிய பிளாஸ்டிக் கூடைகளை எடுத்து வந்தார். சுங்க அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரை நிறுத்தி அந்தக் கூடைகளுக்குள் என்ன இருக்கிறது என்று விசாரித்துள்ளனர். அதற்கு அந்தப் பயணி செல்லப் பிராணியான வெளிநாட்டு நாய் குட்டிகளை எடுத்து வந்திருப்பதாக கூறியுள்ளார்.

இதை அடுத்து சுங்க அதிகாரிகள் அவருடைய கூடைகளை திறந்து பார்த்து சோதனை செய்துள்ளனர். கூடைகளுக்குள் உயிருடன் கூடிய மலைப்பாம்பு குட்டிகள் நெளிந்து கொண்டிருந்தன. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்தக் கூடைகளை தனியே எடுத்து வைத்து ஆய்வு செய்துள்ளனர்.

அதில் அரிய வகை உயிரினங்களான 16 மலைப்பாம்பு குட்டிகள் மற்றும் நீல நிற உடும்புகள் 30 இருந்ததை கண்டுபிடித்தனர். மேலும் வெளிநாட்டு பெர்சியன் வகை அணில்கள் 4 இருந்துள்ளது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்தப் பயணியையும் அவர் கொண்டு வந்த அரிய வகை பாம்புகள், உடும்புகள் மற்றும் அணில்கள் அடங்கிய கூடைகளையும் ஒரு அறையில் வைத்து அடைத்து வைத்தனர். அதோடு சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஒன்றிய வனவிலங்கு பாதுகாப்பு குற்ற பிரிவு போலீசுக்கும் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து ஒன்றிய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவு போலீசார் சென்னை விமான நிலையத்திற்கு விரைந்து வந்து அந்த உயிரினங்களை ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து, நீல நிற உடும்புகள் மத்திய, தென் அமெரிக்க வனப்பகுதிகளில் அதிகமாக காணப்படுபவவைகள் என்றும் பெர்சியன் வகை அணில்கள் ஈரான் மற்றும் மேற்காசிய வனப்பகுதிகளில் அதிகமாக உள்ளன என்றும் மலைப்பாம்பு குட்டிகள் அனைத்தும் வெளிநாடுகளில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளிலும் குளிர் பிரதேசங்களிலும் இருக்கக்கூடியவைகள், இவைகள் விஷமற்றவை ஆனாலும் ஆபத்தானவைகள் என்பதை கண்டுபிடித்தனர்.

அதோடு இந்த உயிரினங்களை கடத்தி வந்த கடத்தல் ஆசாமியிடம் விசாரணை நடத்தினர். அவர் இந்த உயிரினங்களை எதற்காக கடத்தி வந்தார் என்ற தகவலை முழுமையாக கூறவில்லை. மேலும் இந்த உயிரினங்களுக்காண, எந்த ஆவணங்களும் அவரிடம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த உயிரினங்களில் வெளிநாட்டு நோய்க்கிருமிகள் இருக்கக்கூடும். இவைகளை நமது நாட்டுக்குள் அனுமதித்தால், வெளிநாட்டு நோய் கிருமிகள் பரவி, உயிரினங்கள் போன்ற விலங்குகள், மனிதர்களுக்கும் பல்வேறு நோய்கள் உருவாகும் ஆபத்து உள்ளது. எனவே இதை எந்த நாட்டில் இருந்து வந்ததோ? அந்த நாட்டுக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்று சுங்கத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், அரிய வகை உயிரினங்களை கடத்திவந்த பயணியை கைது செய்தனர். அதோடு இந்த விலங்குகளை மீண்டும் சென்னையில் இருந்து தாய்லாந்து நாட்டின் பாங்காக் செல்லும் தாய் ஏர்வேஸ் விமானத்தில் திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளனர். அதற்கான விமான செலவுகள் அனைத்தையும் கடத்தல் ஆசாமியிடம் வசூலிக்கவும் முடிவு செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் டேங்கர் லாரிகளின் மூலம் நிலத்தடி நீர் கொள்ளை.. அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.