ETV Bharat / state

சென்னையில் டேங்கர் லாரிகளின் மூலம் நிலத்தடி நீர் கொள்ளை.. அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2023, 7:58 AM IST

சென்னை புறநகர் பகுதிகளில், தண்ணீர் டேங்கர் லாரிகளின் மூலம் நிலத்தடி நீரை சட்டவிரோதமாக உறிஞ்சும் தனியார் லாரி ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சென்னையில் தனியார் டேங்கர் லாரிகளின் மூலம் நிலத்தடி நீர் கொள்ளை
சென்னையில் தனியார் டேங்கர் லாரிகளின் மூலம் நிலத்தடி நீர் கொள்ளை

சென்னையில் தனியார் டேங்கர் லாரிகளின் மூலம் நிலத்தடி நீர் கொள்ளை

சென்னை: பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் கீழ்கட்டளை ஏரியை ஒட்டிய பகுதிகளில் சாலையின் ஓரமாக நூற்றுக்கணக்கான தண்ணீர் டேங்கர் லாரிகள் (Tanker Lorry) நிறுத்தப்பட்டு நிலத்தடி நீரை வணிக நோக்கத்திற்காக இரவு பகலாக திருடிச் செல்வதாக கூறப்படுகிறது.

இதனால் கீழ்கட்டளை ஏரி, நன்மங்கலம் ஏரி மற்றும் அதனை சுற்றியுள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதியில் நிலத்தடி நீர் வெகு விரைவாக சரிந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். நன்மங்கலம், நெமிலிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் அதில் உள்ள கிணறுகள் ஆகியவற்றில் அதன் உரிமையாளர்களிடம் ஒப்பந்தம் செய்து தனியார் டேங்கர் லாரிகள் தண்ணீரை எடுத்து விநியோகம் செய்வதாக கூறப்படுகிறது.

ஆனால் தண்ணீரை விதிமுறைகளுக்கு மாறாக நீண்ட பிளாஸ்டிக் பைப்புகளில், மோட்டார் மூலம் அழுத்தம் கொடுத்து அதிகப்படியான அளவில் உறிஞ்சி கொள்ளை லாபத்துக்கு இ.சி.ஆர், ஓ.எம்.ஆர் சாலைகளில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு தண்ணீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, சென்னை புறநகர் பகுதியில் முக்கிய பிரதான சாலையாக உள்ள பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலையை, லாரிகள் ஆக்கிரமித்து நீரேற்று நிலையமாக மாற்றி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து அப்பகுதியில் உள்ள குடியிருப்பு சங்கத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் லாரி உரிமையாளர்களிடம் கேட்டபோது, "தண்ணீர் எடுக்க அனுமதி உள்ளது. நீங்கள் எங்கு வேண்டுமானாலும் புகார் கொடுங்கள்" என மிரட்டுவதாக வேதனை தெரிவித்து உள்ளனர்.

மேலும் தண்ணீர் லாரிகளால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து இடையூரை சந்திப்பதாகவும், சாலைகள் மிகவும் சேதமடைய இவர்கள் தான் காரணம் என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் இரவு பகலாக முக்கிய சாலையில் நடைபெறும் தண்ணீர் திருட்டு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகம், பல்லாவரம் துரைப்பாக்கம் சாலை அருகே அமைந்து இருந்தாலும் அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் டேவிட் மனோகரன் நம்மிடம் கூறியதாவது, "பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் நூற்றுக்கணக்கான தண்ணீர் டேங்கர் லாரிகளில் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. நன்மங்கலம், நெமிலிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பட்டா நிலங்களில் இருந்து போர் போட்டு அங்கிருந்து பைப்புகள் மூலம் தண்ணீர் லாரிகளில் உறிஞ்சப்படுகிறது.

மேலும் இவர்கள் சட்டத்திற்கு புறம்பாக அதிகப்படியான நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றனர். இதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் சட்ட முறைகளை முறைப்படுத்தி அதை சரியாக பின்பற்றுகிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும். இல்லையென்றால் அரசே இதை நடத்தி தனியாருக்கு தண்ணீரை விற்பனை செய்யலாம்.

இவர்கள் நிலத்தடி நீரை அதிகப்படியாக உறிஞ்சிக் கொள்வதால், அப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது. நிலத்தடி நீரை அரசு மீட்பதற்கு கட்டாயம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பல்லாவரம் - துறைப்பாக்கம் 200 அடி சாலை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. பெரிய ஐ.டி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அதிக அளவில் இந்த பகுதியில் அமைந்துள்ளன. இதனால் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிகப்படியான தண்ணீர் லாரிகள், சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு இச்சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால் தினம்தோறும் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் தொடர்ந்து விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

தண்ணீர் லாரிகளால் தொடர்ந்து பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலை குண்டும் குழியுமாக மோசமாகி உள்ளது. அதை பேட்ச் ஒர்க் செய்தாலும் தண்ணீர் லாரிகள் தொடர்ந்து அதை சேதப்படுத்தி வருகின்றன. அதே போல் இந்த சாலையில் சிமெண்ட் குடோனும் உள்ளதால், சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி செல்லும் லாரிகளும் சாலையை ஆக்கிரமித்துக் கொள்கின்றன.

இந்த லாரிகள் அனைத்தும் தொடர்ந்து பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையிலே செயல்பட்டு வருகிறது. இந்த சாலை அருகே பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகம் இருந்தும், இது குறித்து எந்த அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. இதனால் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ராகுல்நாத் நேரில் தலையிட்டு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" எனக் கூறினார்.

அதைத் தொடர்ந்து, மாநில நிலம் மற்றும் மேற்பரப்பு ஆதார விவர குறிப்பு மையத்தின் அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, "பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையை ஒட்டி நன்மங்கலம், நெமிலிச்சேரி ஏரி அருகே சட்டவிரோதமாக டேங்கர் லாரிகளில் தண்ணீர் உறிஞ்சப்படுவதாக எங்களிடம் ஏற்கனவே பல புகார்கள் வந்துள்ளன.

ஆனால் அந்த பகுதிகள் எங்கள் கட்டுப்பாட்டில் வரவில்லை, தாம்பரம் கோட்டாட்சியரின் கட்டுப்பாட்டுக்குள் அந்த பகுதிகள் வருகின்றன. இதனால் எங்களுக்கு வந்த புகார்கள் அனைத்தும் தாம்பரம் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைத்துள்ளோம். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள 384 கிராமங்களை தவிர தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.

ஆனால் இந்த நான்கு மாவட்டத்தில் உள்ள 384 கிராமமும், அந்தந்த கோட்டாட்சியரின் கட்டுப்பாட்டின் கீழ் மட்டுமே வருகிறது. எனவே இதற்கு அவர்கள் தான் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, இதுகுறித்து தாம்பரம் கோட்டாட்சியர் செல்வகுமாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, "என்னிடம் இதுவரை முறையான புகார் எதுவும் வரவில்லை. ஆனால் என்னிடம் சட்டபூர்வமாக அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

தகவலின் அடிப்படையில் தாம்பரம் மற்றும் பல்லாவரம் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டதன் அடிப்படையில், நன்மங்கலம், நெமிலிச்சேரி ஏரி ஒட்டிய பகுதிகளில் இருந்து பழுப்புகள் மூலம் நிலத்தடி நீரை டேங்கர் லாரிகளில் நிரப்பி வந்த அந்த பழுப்புகள் அனைத்தையும் அங்கிருந்து அகற்றி உள்ளனர்.

தனியார் தண்ணீர் டேங்கர் லாரி ஓட்டுனர்களோ அல்லது உரிமையாளர்கள் மீதோ இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. தண்ணீரை சட்டவிரோதமாக எடுப்பதை தடுப்பதற்காக பழுப்புகள் மட்டும் அகற்றப்பட்டு உள்ளன. ஆனாலும் தொடர்ந்து டேங்கர் லாரிகள் மூலம் சட்ட விரோதமாக தண்ணீர் எடுக்கப்படுவதாக தகவல் வருகிறது. இதனால் நேரில் ஆய்வு செய்து தண்ணீர் எடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தண்ணீரை சட்ட விரோதமாக எடுப்பது தடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நிலவை தொட்ட சந்திராயன்கள்..! சவால்கள் நிறைந்த சந்திராயன்களில் தமிழர்களின் பங்களிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.