தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் காலியாகவுள்ள முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை ஒன்று ஆகிய தேர்விற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூன் மாதம் 24ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விநியோகிக்கப்பட்டது. இதில், இரண்டாயிரத்து 144 காலிப்பணியிடங்களுக்கு சுமார் ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 463 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அவர்களுக்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் மாதம் 27, 28, 29 ஆகிய தேதிகளில் ஆன்லைன் மூலம் நடத்தப்போவதாக பள்ளிக்கல்வித் துறை முன்னதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் 154 மையங்களில் இத்தேர்வானது இன்று(செப்-27) தொடங்கியது. குறிப்பாக இன்று நடைபெறும் இயற்பியல் தேர்வை, கோடம்பாக்கம் தேர்வு மையத்தில் எழுத வந்த தேர்வர்கள் கடுமையான சோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், சோதனையில் பெண் தேர்வர்களின் கம்மல், மூக்குத்தி, கொலுசு போன்ற ஆபரணங்களை கழற்றிய பின்னர் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஏற்கனவே, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஹால் டிக்கெட்டில் விதிமுறைகள் விளக்கப்பட்டிருந்தும்; அதனை முழுமையாக படிக்காமல் தேர்வெழுத வந்துள்ளனர் என பறக்கும் படையினர் வருத்தம் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:
முதுகலை ஆசிரியர் தேர்வு - பதற்றமான மாவட்டங்களில் கூடுதல் பாதுகாப்பு