ETV Bharat / bharat

ராகுல் - சோனியா செல்பி.. மெகபூபா முப்தி தர்ணா.. தல தோனி வாக்களிப்பு.. 3 மணி நிலவரம் என்ன? - Lok sabha election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 25, 2024, 11:44 AM IST

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான ஆறாம் கட்ட வாக்குப்பதிவு டெல்லி, ஹரியாணா, பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 58 தொகுதிகள் காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தேர்தல் கள புகைப்படங்கள்
தேர்தல் கள புகைப்படங்கள் (Credit - Rahul Gandhi & ECI India X Accounts)

டெல்லி: 18வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஆறாம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று(மே 25) நடைபெற்று வருகிறது. இதில், தலைநகர் டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகள், ஹரியாணா மாநிலத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும், உத்தரபிரதேசம்-14, பீகார்-8, மேற்கு வங்கம் - 8, ஒடிசா - 6, ஜார்க்கண்ட் - 4 மற்றும் ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதி என மொத்தமாக 58 தொகுதிகளில் வாக்குப்ப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில், 889 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில் 11.13 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

காலை முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, ராஷ்டிரியபதி பவன் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்காளித்தார். முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியின் தனது வாக்கினை பதிவு செய்தார். இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தனது வாக்கினை பதிவு செய்தார்.

அதேபோல், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு வெளியே வந்தபோது ராகுல் காந்தி தனது தாயாருடன் செல்பி எடுத்துக்கொண்டார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது மனைவி சுனிதாவுடன் வந்து வாக்களித்தார். அதேபோல், மத்திய அமைச்சரும், சுல்தான்பூர் தொகுதி பாஜக வேட்பாளருமான மேனகா காந்தி தனது வாக்கினை பதிவு செய்தார். கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் தனது வாக்கினை பதிவு செய்தார்.

ஒடிசா மாநிலத்தில் மக்களவைத் தேர்தலோடு சேர்த்து சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக், மாற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் 5டி திட்டம் மற்றும் நபின் ஒடிசாவின் தலைவராக வி.கே.பாண்டியன் உள்ளிட்டோர் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

இதனிடையே, ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தி தங்களது கட்சியின் வாக்குச்சாவடி முகவரை காரணமின்றி வெளியேற்றியதாக திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதேபோல், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்குச்சாவடிக்கு வந்த அவருடன் பொதுமக்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

3 மணி வாக்குப்பதிவு நிலவரம்: பிற்பகல் 3 மணி நிலவரப்படி 49.02% விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது. அதில், பீகார் - 45.21%, ஹரியாணா - 46.26%, ஜம்மு-காஷ்மீர் - 44.41%, ஜார்க்கண்ட் - 54.34%, டெல்லி - 44.58%, ஒடிசா - 48.44%, உத்தரபிரதேசம் - 43.95%, மேற்கு வங்கம் - 70.19% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: குழந்தைகளை திட்டாமல், அடிக்காமல் நல்வழிப்படுத்த முடியுமா? UNICEF சொல்லும் அற்புத வழிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.