ETV Bharat / state

ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் - என்ஐஏ விசாரணை நடத்த ஆயத்தம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 15, 2023, 8:37 AM IST

NIA is ready to investigate
என்.ஐ.ஏ விசாரணை நடத்த ஆயத்தம்

NIA is ready to investigate: சென்னை ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், என்.ஐ.ஏ விசாரணை நடத்தப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை: கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் நுழைவு வாயில் முன்பு கடந்த அக்டோபர் 25ஆம் தேதி பிரபல ரவுடி கருக்கா வினோத் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து, பெட்ரோல் குண்டு ஒன்றை வீசி விட்டு தப்பிச் செல்ல முயன்றார். அப்போது, ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பில் இருந்த போலீசார், அவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.

போலீசாரின் விசாரணையில், அவர் பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பது தெரிய வந்தது. மேலும், அவரிடம் இருந்த மூன்று பெட்ரோல் குண்டுகளைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதன்பின், ரவுடியிடம் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியதற்கான காரணம் என்ன, பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா என்று கிண்டி காவல் துறையினர் வழக்குப் பதிந்து, கருக்கா வினோத்தை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் விசாரணை முடிந்த பிறகு, அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தற்போது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில், இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரணைக்கு மாற்ற வேண்டுமென கூறப்பட்ட நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் தற்போது என்.ஐ.ஏ (N.I.A) விசாரணையைத் தொடங்க உள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் இன்று உத்தரவு பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே கிண்டி போலீசார் நடத்திய விசாரணை அறிக்கை, முதல் தகவல் அறிக்கை, கருக்கா வினோத் கொடுத்த வாக்குமூலம் ஆகியவற்றை என்.ஐ.ஏ அதிகாரிகள் திரட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் வழக்கு ஒன்றை பதிவு செய்து, விசாரணை நடத்துவார்கள் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுள்ளது.

கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க முடியாத நிலையில், கிண்டி போலீசார் என்ன மாதிரியான விசாரணையை நடத்தி இருக்கிறார்கள் எனவும், என்ன மாதிரியான வாக்குமூலங்களைப் பெற்று உள்ளார்கள் என்பது குறித்தும் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வார்கள் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க:ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி ஊதியம் வழங்காதது ஏன்? உயர் நீதிமன்றம் காட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.