ETV Bharat / state

ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி ஊதியம் வழங்காதது ஏன்? உயர் நீதிமன்றம் காட்டம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 15, 2023, 8:00 AM IST

Madras High Court: ஊழியர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வை வழங்கிவிட்டு, ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க மறுத்த தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் செயல் பாரபட்சமானது என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

chennai high court
சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபரில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 17-லிருந்து 28 சதவீதமாகவும், ஓய்வூதியத்தை 28 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது. அதனடிப்படையில், 2022ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து தமிழக அரசு சார்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர் ஆகியோருக்கு அதே அளவு உயர்த்தி அறிவித்தது.

இந்த உயர்வை, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படவில்லை எனக் கூறி, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலச் சங்கம் உள்ளிட்டோர் சார்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில், 2002ஆம் ஆண்டில் பிறப்பித்த அரசாணையின்படி அரசு ஊழியர்களுக்கான நலத் திட்டத்தை நஷ்டத்தில் இயங்கக் கூடிய பொதுத்துறை நிறுவனங்களுக்கு அமல்படுத்த வேண்டாம் என்றும், ஒருவேளை வழங்குவதாக இருந்தால், அரசின் முன் அனுமதி பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில், அரசின் ஒப்புதல் கேட்டு குடிநீர் வாரியம் அனுப்பிய கடிதத்தை ஆய்வு செய்த அரசு, 2022ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்து வாரியத்தின் சொந்த செலவில் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஊழியர்களுக்கு மட்டும் அகவிலைப்படியை கொடுத்துவிட்டு, ஓய்வூதியதாரர்களுக்கு மறுத்தது பாரபட்சம் எனவும், உண்மையிலேயே நிதி நெருக்கடியில் இருந்திருந்தால் ஊழியர்களுக்கும் கொடுத்திருக்கக் கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

ஊழியர்களுக்கு ஜனவரியில் இருந்தும், ஓய்வூதியர்களுக்கு அக்டோபரில் இருந்தும் வழங்குவது பாரபட்சமானது என அதிருப்தி தெரிவித்த நீதிபதி, ஓய்வூதியதாரர்களுக்கும் 2022 ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்வைக் கணக்கிட்டு 4 மாதங்களில் வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மருந்து தட்டுப்பாடு குறித்து விவாதிக்க தயாரா? - எடப்பாடிக்கு சவால் விட்ட மா.சுப்பிரமணியன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.