ETV Bharat / state

“மீண்டும் ஒரு பொதுக்கூட்டம் நடத்தி மன்னிப்பு கேட்க வேண்டும்” - அதிமுக முன்னாள் எம்எல்ஏ குமரகுருவுக்கு நீதிமன்றம் உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2023, 2:15 PM IST

madras higcourt
சென்னை உயர் நீதிமன்றம்

TN CM Case of defaming: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியது குறித்து மீண்டும் பொதுக் கூட்டம் கூட்டி, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கும்படி, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.குமரகுருவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: கள்ளக்குறிச்சியில் உள்ள மந்தைவெளிப் பகுதியில் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு பொதுக்கூட்டத்தில் பேசிய கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுரு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக கள்ளக்குறிச்சி திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம் காவல்துறையிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், குமரகுரு மீது கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி குமரகுரு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், “எனது பேச்சு குறித்து சமூக வலைத்தளத்தில் மன்னிப்பு கோரிய பிறகும், அரசியல் உள்நோக்கத்தோடு வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதால், தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்” என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், காவல் துறையிடம் குமரகுரு முறையான அனுமதி பெற்று மற்றொரு பொதுக்கூட்டத்தை நடத்தி, அதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார். இந்த நிபந்தனையை நிறைவேற்றியது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 11ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இதையும் படிங்க:“அதிமுக - பாஜக பிரிவு நாடகம் அல்ல” - எடப்பாடி பழனிசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.