ETV Bharat / state

துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கும் அரசாணைகள் செல்லாது - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

author img

By

Published : Mar 14, 2023, 3:41 PM IST

“நன்னடத்தை பிரமாணத்தை மீறுவோரை தண்டிக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை” - உயர் நீதிமன்றம்!
“நன்னடத்தை பிரமாணத்தை மீறுவோரை தண்டிக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை” - உயர் நீதிமன்றம்!

நன்னடத்தை பிரமாணத்தை மீறும் நபர்களுக்கு சிறை தண்டனை விதிக்க காவல்துறை துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளைச் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை: தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களிடம் காவல் துறையினர், எந்த குற்றத்திலும் ஈடுபட மாட்டோம் என நன்னடத்தை பிரமாணம் பெறுவது வழக்கம். இந்த நன்னடத்தை பிரமாணத்தை மீறுவோரைச் சிறையில் அடைக்கக் காவல் துறை துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கி கடந்த 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்திருந்தது.

இதன் அடிப்படையில் நன்னடத்தை பிரமாணத்தை மீறியதாகச் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் இரு வேறு நீதிபதிகள் இரு வேறு விதமாகத் தீர்ப்பளித்தனர். எனவே இது சம்பந்தமான சட்டக் கேள்விக்கு விடை காண நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அடங்கிய சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது.

தற்போது இந்த வழக்குகளை விசாரித்த சிறப்பு அமர்வு, “நன்னடத்தை பிரமாணத்தை மீறுவோரைச் சிறையில் அடைக்கக் காவல் துறை துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கி பிறப்பிக்கப்பட்ட இரு அரசாணைகளும், அரசியல் சாசனத்துக்கு விரோதமானவை ஆகும்.

மேலும், நீதித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் அதிகாரத்தைக் காவல் துறையினர் பயன்படுத்த முடியாது. ஆகையால் இந்த இரு அரசாணைகளும் அமலுக்கு வருவதற்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும். அதேநேரம் நன்னடத்தை பிரமாணத்தை மீறுவோருக்கு எதிராக குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்” எனத் தெரிவித்து உத்தரவிட்டது.

இதையும் படிங்க: அரசு வேலைக்காக போலி சாதிச் சான்றிதழ்.. தண்டிக்காமல் விடக்கூடாது.. உயர் நீதிமன்றம்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.