ETV Bharat / state

ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக எம்.எஸ்.தோனி தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு!

author img

By

Published : Aug 4, 2023, 7:40 AM IST

Updated : Aug 4, 2023, 1:18 PM IST

madras high court
ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக எம்.எஸ்.தோனி தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு

ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சென்னை: 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில், தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில், தனது பெயருக்கு களங்கம் விளைவித்ததாகக் கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழங்க கோரி, தனியார் தொலைக்காட்சி நிர்வாகிகள் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக, கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி 2014ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில், சம்பத்குமார் தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்த பதில் மனுவில், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகள் குறித்து களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்துள்ளதாக கூறி, ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருக்கிறார் என்றும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் ஆர்.சக்திவேல் அடங்கிய அமர்வில், நேற்று (ஆகஸ்ட் 3) விசாரணைக்கு வந்தது. ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தரப்பில் வழக்கறிஞர் பெரும்புலாவில் ராதாகிருஷ்ணன் ஆஜராகி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரி தோனி அளித்த விண்ணப்பத்தில், தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் தங்கள் விளக்கத்தை கேட்காமல் அனுமதி அளித்திருப்பதாகவும், நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு எந்த கருத்தையும் சம்பத்குமார் கூறவில்லை எனவும், வாதிடப்பட்டது.

மேலும், தோனி தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.ஆர்.ராமன் ஆஜராகி, உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி சம்பத்குமார் செயல்பட்டுள்ளதாகவும், அந்த உத்தரவுகளுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பதிலளித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 2014ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவு நகலை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமெனவும் கேட்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தோனி தரப்பு கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:முன்னாள் டிஜிபியின் மருமளுடன் திருமணத்தை மீறிய உறவில் எஸ்.பி. - நடவடிக்கை எடுக்காத டிஜிபிக்கு கண்டனம்!

Last Updated :Aug 4, 2023, 1:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.