ETV Bharat / state

சீமை கருவேல மரங்களை அகற்ற எல்லா பஞ்சாயத்துகளுக்கும் அரசே உத்தரவிடலாம் - நீதிமன்றம் கருத்து

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2023, 10:41 PM IST

Chennai High Court
சென்னை உயர்நீதிமன்றம்

Chennai High Court: சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக, சுற்றுச்சூழல், நீர் வளம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை செயலாளர்கள் அடங்கிய உயர்மட்ட குழு கூட்டத்தைக் கூட்டி திட்டத்தை வகுக்கும் படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்ற உத்தரவிடக் கோரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (நவ.30) விசாரணைக்கு வந்தது.

அப்போது, சீமை கருவேல மரங்களை அகற்றியது தொடர்பாக தமிழக அரசு தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த அறிக்கைகளை ஆய்வு செய்த நீதிபதிகள், மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக டெண்டர்கள் கோரலாம் என யோசனை தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசிய நீதிபதிகள், சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக, தமிழக அரசு கொள்கைகள் வகுத்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என அதிருப்தி தெரிவித்தனர். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது மாநில அரசின் கடமை என்றும் சீமை கருவேல மரங்களை அகற்றும்படி அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் அரசு உத்தரவிடலாம் என்று தெரிவித்தனர்.

சீமை கருவேல மரங்கள் இல்லாத கிராமம் என ஒரு கிராமத்தை அடையாளம் காட்ட முடியுமா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த மரங்களை எப்படி, எப்போது அகற்றப் போகிறீர்கள்? என்பது குறித்து, நீர்வளத்துறை, சுற்றுச்சூழல் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அடங்கிய உயர்மட்ட கூட்டத்தைக் கூட்டி, திட்டம் வகுக்க வேண்டும் என்று அரசுக்கு அறிவுறுத்தி, நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஜனவரி 8 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க: கல்லாகிப் போன மரம்.. காண்பதற்கு ஆர்வம் காட்டிய பள்ளி மாணவர்கள்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.