ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தல்: தொடங்கியது வாக்குப்பதிவு

author img

By

Published : Oct 5, 2021, 6:51 PM IST

Updated : Oct 6, 2021, 7:53 AM IST

உள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சித் தேர்தல்

தமிழ்நாட்டில் இன்று உள்ளாட்சித் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி வாக்குப்பதிவானது இரண்டு கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு 39 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று (அக். 6) நடைபெற்றுவருகிறது. அதற்கான பரப்புரை நேற்று மாலை 5 மணியோடு ஓய்ந்தது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கி, 22ஆம் தேதிவரை நடந்தது. மொத்தமுள்ள 27 ஆயிரத்து 791 பதவிகளுக்கு ஒரு லட்சத்து 698 பேர் வேட்புமனு தாக்கல்செய்திருந்தனர்.

தாக்கல்செய்யப்பட்ட வேட்புமனுக்களைப் பரிசீலனை செய்தபோது ஆயிரத்து 246 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதனையடுத்து 25ஆம் தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இறுதியாக 80 ஆயிரத்து 819 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இதற்கிடையே, உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 3,346 பேர் போட்டியின்றித் தேர்வுசெய்யப்பட்டனர். தற்போது 24 ஆயிரத்து 416 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

இன்று வாக்குப்பதிவு நடக்கும் பகுதிகள்

செங்கல்பட்டு மாவட்டம்:

லத்தூர், புனித தோமையார்மலை, திருக்கழுக்குன்றம், திருப்போரூர்

காஞ்சிபுரம் மாவட்டம்:

காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத்

விழுப்புரம் மாவட்டம்

செஞ்சி,கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணெய்நல்லூர், வானூர், விக்கிரவாண்டி.

கள்ளக்குறிச்சி மாவட்டம்:

ரிஷிவந்தியம், திருநாவலூர், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை

வேலூர் மாவட்டம்:

குடியாத்தம், கே.வி. குப்பம், காட்பாடி, பேர்ணாம்பட்டு.

ராணிப்பேட்டை மாவட்டம்:

ஆற்காடு, திமிரி,வாலாஜா

திருப்பத்தூர் மாவட்டம்:

திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி, நாட்றம்பள்ளி,

திருநெல்வேலி மாவட்டம்:

அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூர், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி

தென்காசி மாவட்டம்:

ஆலங்குளம், கடையம், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய 39 ஒன்றியங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது.

இதனையொட்டி அந்த பகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை ஓய்ந்தது. பரப்புரை ஓய்ந்ததை அடுத்து உள்ளாட்சி அமைப்பில் வெளியில் இருந்து அழைத்து வரப்படும் அரசியல் கட்சியினர் பிரமுகர்கள், தொண்டர்கள் அந்த உள்ளாட்சிப் பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல்

முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் 39 ஊராட்சி ஒன்றியங்கள், அதைச் சுற்றி 5 கி.மீ. தொலைவுவரை உள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் (அக். 4) காலை 10 மணிமுதல் இன்று நள்ளிரவு வரை மதுக்கடைகளைத் திறக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சீட்டுகள்

வாக்குச்சீட்டைப் பொறுத்தவரை வாக்காளர்களுக்கு நான்கு வண்ண வாக்குச்சீட்டுகள் கொடுக்கப்படும். அதாவது கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சித் தலைவர் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு பச்சை நிறத்திலும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும்.

உள்ளாட்சித் தேர்தல்


மொத்த வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் ஆணையம் ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள அடிப்படை விவரங்களைக் கொண்டு ஆன்லைன் முறையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டதாக அறிவித்தது.

அந்தப் பட்டியலில் 37 லட்சத்து 77 ஆயிரத்து 524 ஆண் வாக்காளர்களும் 38 லட்சத்து 81 ஆயிரத்து 361 பெண் வாக்காளர்களும் 835 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 76 லட்சதத்து 59 ஆயிரத்து 720 வாக்காளர்கள் இருக்கின்றனர்.

உள்ளாட்சித் தேர்தல்

இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய முதல்கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடக்கிறது. மாலை 5 முதல் 6 மணிவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், கரோனா அறிகுறி உள்ளவர்கள் மட்டும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் ஒன்பதாம் தேதி நடக்கவிருக்கிறது.

Last Updated :Oct 6, 2021, 7:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.