ETV Bharat / state

2வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு.. முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 3, 2024, 4:15 PM IST

தமிழகத்தில் இரண்டாவது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை
தமிழகத்தில் இரண்டாவது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை

IT raid: தமிழகம் முழுவதும் அரசு ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ளும் கட்டுமான நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை: தமிழகத்தில் அரசு ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ளும் தனியார் கட்டுமான நிறுவனத்துக்குச் சொந்தமான அலுவலகங்கள், நிறுவனத்தின் உரிமையாளர்களின் வீடுகள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, ஈரோடு, விருதுநகர், சேலம், நாமக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் சென்னையில் மட்டும் அண்ணா நகர், அமைந்தகரை, எழும்பூர் உள்ளிட்ட சுமார் 10 இடங்களில் தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். ஈரோடு மாவட்டத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சிஎம்கே ப்ராஜெக்ட் பிரைவேட் லிமிடெட் என்கிற தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை அமைந்தகரை செல்லம்மாள் தெருவில் செயல்பட்டு வரும் சிஎம்கே ப்ராஜெக்ட் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் இரண்டாவது நாளாக சோதனை செய்து வருகின்றனர்.

குறிப்பாக, இந்த நிறுவனம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு இடம், பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் உள்ள கட்டுமானங்கள், கொச்சியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரயில்வே மற்றும் மெட்ரோ பணிகளையும் இந்த நிறுவனம் கையாண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்நிறுவனம் அரசு கட்டுமான ஒப்பந்தங்களை மேற்கொண்டு, முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டடங்கள், குடிசை மாற்று வாரிய கட்டடங்கள் என பணிகள் மேற்கொண்டு வரும் சத்யமூர்த்தி அண்ட் கோ கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம், கார்ப்பரேட் அலுவலகங்கள் உள்ளிட்டவைகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல், கோவை மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். கோவை எலன் இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் விக்னேஷ் என்பவரது இல்லம், அலுவலகம் கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள கிரீன் பீல்ட் ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் அலுவலகத்திலும் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் அரசு ஒப்பந்தங்களை எடுக்கும் கட்டுமான நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் சோதனையில், முக்கிய ஆவணங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதில் கோப்புகள், அரசு ஒப்பந்த ஆவணங்கள், கணினியில் பதிவேற்றிய ஆவணங்கள் என கைப்பற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: "இயக்குநர் லோகேஷ் கனகராஜிக்கு உளவியல் சோதனை செய்ய வேண்டும்" - மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.