ETV Bharat / state

"பொறியியல் கலந்தாய்வு ஜூலை 2ஆம் தேதி தொடங்கும்" - அமைச்சர் பொன்முடி!

author img

By

Published : May 19, 2023, 3:46 PM IST

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு மாதம் முன்னதாக ஜூலை 2ஆம் தேதி கலந்தாய்வு தொடங்கவுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

higher
பொறியியல்

சென்னை: தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 3,324 மையங்களில், 8.17 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதையடுத்து கடந்த 8ஆம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. அதன்படி தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து, கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணிப்பிக்கும் வேலைகளில் மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: TN SSLC Result: வெளியானது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்; வழக்கம்போல் மாணவியர் தேர்ச்சி அதிகம்!

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப் படிப்புகளான பி.இ மற்றும் பி.டெக் படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் கடந்த 5ஆம் தேதி முதல் விண்ணப்பித்து வருகின்றனர். கடந்த 17ஆம் தேதி வரை, ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 339 பேர் ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளனர். அவர்களில் 90,471 பேர் பதிவுக் கட்டணத்தை செலுத்தியுள்ளதாகவும், 50,686 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளதாகவும் தெரிகிறது. பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் ஜூன் 4ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 12ஆம் தேதி வெளியிடப்பட்டு, பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 8ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு முன்னதாக தொடங்கும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று(மே.19) செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஒரு மாதம் முன்னதாக ஜூலை 2ஆம் தேதி தொடங்கவுள்ளது என்றும், பொதுப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 7ஆம் தேதி நடைபெறவுள்ளது என்றும் தெரிவித்தார். பாலிடெக்னிக் படிப்புகளில் சேர மாணவ மாணவிகள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.

கலந்தாய்வு முடிவடைந்து, செப்டம்பர் 3ஆம் தேதி பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும் என்றும் தெரிவித்தார். கலை அறிவியல் படிப்புகளுக்கு இரண்டு லட்சத்து 58 ஆயிரத்து 627 பேர் இதுவரை விண்ணப்பித்திருப்பதாகவும், விண்ணப்பிக்கும் தேதி நேற்றுடன் முடிவடைந்த நிலையில், மேலும் 3 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மாணவர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக கல்லூரிகள் திறந்திருக்கும் என்றும், வரும் சனி, ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் பொன்முடி தெரிவித்தார்.

இதையும் படிங்க: பொறியியல் கலந்தாய்வில் மாணவர்கள் கவனிக்க வேண்டியது என்ன? - அண்ணா பல்கலை. துணைவேந்தர் வேல்ராஜ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.