ETV Bharat / entertainment

ராமராஜனின் சாமானியன் திருட்டு கதையா? - கதாசிரியர் கார்த்திக் குமார் பிரத்யேக பேட்டி! - Saamaanian Film Story Issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 25, 2024, 8:08 PM IST

Saamaanian Film Story Issue: நடிகர் ராமராஜன் நடிப்பில் வெளிவந்துள்ள சாமானியன் திரைப்படத்தின் கதை என்னுடையது என சேகர் என்பவர் கூறிய நிலையில், இது அவர் கதை இல்லை என்பது உறுதியானது என படத்தின் கதாசிரியர் கார்த்திக் குமார் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பிரத்யேகமாக தெரிவித்துள்ளார்.

சாமானியன் போஸ்டர், கதையாசிரியர் கார்த்திக் குமார்
சாமானியன் போஸ்டர், கதையாசிரியர் கார்த்திக் குமார் (credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழ் சினிமாவில் 80களில் கொடி கட்டிப் பறந்த நடிகர் ராமராஜன். இவரது படங்கள், பாடல்களுக்காகவே 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு சாமானியன் என்ற படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார். இயக்குநர் ராகேஷ் இயக்கியுள்ள இப்படத்தை எக்ஸட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் மதியழகன் தயாரித்துள்ளார். இப்படம் இந்த வாரம் வெளியாகி வழக்கம்போல் கிராமப்புறங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராமராஜனை திரையில் பார்த்த அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கதையாசிரியர் கார்த்திக் குமார் பேட்டி (credits - ETV Bharat Tamil Nadu)

இதனிடையே, இப்படத்தின் கதை என்னுடையது என சேகர் என்பவர் போர்க்கொடி தூக்கியுள்ள சம்பவம் திரைத்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரிய இயக்குநர்களின் படங்களுக்கு இதுபோன்ற கதை திருட்டு புகார் வருவது இயல்பு. ஆனால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்த ராமராஜன் படத்தின் மீது கதை திருட்டு குற்றச்சாட்டு எழுந்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

இதுகுறித்து சாமானியன் படத்தின் கதாசிரியர் கார்த்திக் குமார் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "நான் சாமானியன் படத்தில் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளேன். இப்படத்தின் கதை என்னுடையது என்று சேகர் என்பவர் சொல்லிக்கொண்டு இருப்பது முழுக்க முழுக்க பொய்யான விஷயம். கடந்த 2015ஆம் ஆண்டு எனக்கு நடந்த உண்மைச் சம்பவத்தை வைத்து இக்கதையை எழுதினேன்.

சங்கர நாராயணன் என்ற எனது தாத்தாவின் கதாபாத்திரத்தில் ராமராஜன் நடித்துள்ளார். சாமானியன் என்ற குழந்தையின் தகப்பன் நான்தான். இக்கதையை எழுத்தாளர் யூனியனில் பதிவு செய்துள்ளோம்‌. கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதியே படப்பிடிப்பு பணிகளை முடித்துவிட்டோம். ஆனால், அவர் 2022ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி பதிவு செய்துள்ளார். அதுவே தவறு.

எழுத்தாளர் சங்கம், இயக்குநர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என அனைத்திலும் அவர் தரப்பில் உண்மையில்லை என்று கடிதம் கொடுத்துவிட்டனர். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனங்கள் எல்லாமே எனது தான். ஆனால் இயக்குநர், எழுத்து - இயக்கம் என்று அவரது பெயரைப் போட்டுக்கொண்டார்.

தயாரிப்பாளர் மீதுள்ள மரியாதை காரணமாக நான் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. தற்போது மற்றொருவர் மூலம் வரும் பிரச்னையில் பெரிய சூழ்ச்சி இருக்கிறது. இதனை பெரிய விஷயமாக மாற்ற வேண்டாம். படம் நல்லபடியாக வெளியாகியுள்ளது. வலியும், வேதனையும் எல்லோருக்கும் தெரிய வேண்டும்.

ஓசூரில் நான் ஒரு வீடு வாங்கினேன். அதில் நடந்த பிரச்னையை தான் இப்படத்தில் பதிவு செய்துள்ளேன். நான் பார்த்த கதாபாத்திரங்கள் சேர்த்து இதில் பண்ணியுள்ளேன். அவர் அழைத்த பேச்சுவார்த்தைக்கு எல்லாம் சென்றோம். அங்கு அவர் கதை இல்லை என்பது உறுதியானது. இப்பிரச்னையை முடிக்க அழைத்தாலும் அவர் வர மறுக்கிறார்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கேன்ஸ் திரைப்பட விழாவில் வரலாறு படைத்த இந்திய நடிகை அனசுயா சென்குப்தா! - Cannes Film Festival

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.