ETV Bharat / state

முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் மேல் முறையீட்டு வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி மனுத்தாக்கல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 22, 2023, 8:39 PM IST

former DGP Rajeshdas petitioned to transfer appeal case from the Villupuram court to another court
மேல்முறையீட்டு வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் மனு தாக்கல்

Rajesh das Case: பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கை, விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

சென்னை: பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து, விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், கடந்த ஜூன் 16ஆம் தேதி தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜேஷ்தாஸ், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு மீதான தீர்ப்பு ஜனவரி 6ஆம் தேதி அறிவிக்கப்படும் என விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில், விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணையை, வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி ராஜேஷ்தாஸ் தரப்பில் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், “இந்த வழக்கு தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள், எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வாதிடுவதை தவிர்ப்பது போன்ற எண்ணம், முதன்மை அமர்வு நீதிபதி மனதில் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது எனக் கூறியிருந்தார். வாதங்களை முன் வைக்க அவகாசம் கேட்ட நிலையில், அமர்வு நீதிபதி, தீர்ப்பை தள்ளிவைத்துள்ளதாகவும், அதனால் வழக்கை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்தால் தனக்கு நியாயம் கிடைக்காது என்பதால், விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும்.

இந்த மனு மீது முடிவெடுக்கும் வரை, விழுப்புரம் அமர்வு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்” என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி ஜெயச்சந்திரன், ஜனவரி 2ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: திமுக எம்பி கௌதம சிகாமணி மீதான வழக்கில் ஜன.4ஆம் தேதி குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும்: சென்னை சிறப்பு நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.