ETV Bharat / state

திமுக எம்பி கௌதம சிகாமணி மீதான வழக்கில் ஜன.4ஆம் தேதி குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும்: சென்னை சிறப்பு நீதிமன்றம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 22, 2023, 7:31 PM IST

DMK MP Gautham Sigamani Case: திமுக எம்.பி., கௌதம சிகாமணிக்கு எதிரான அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கில், ஜனவரி 4ஆம் தேதி குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

DMK MP Gautham Sigamani Case
திமுக எம்பி கவுதம் சிகாமணி வழக்கு

சென்னை: கடந்த 2006-2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுங்கத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தபோது, விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது 2012ல் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவுசெய்த வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறையினர், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி தொடர்புடைய இடங்களில் கடந்த ஜூலை மாதம் சோதனை நடத்தியது. செம்மண் முறைகேடு தொடர்பாகக் கிடைத்த பெருந்தொகையை ஹவாலா பரிவர்த்தனைகள் மூலம் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், சோதனையின் முடிவில், முக்கிய ஆவணங்களும், 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரிட்டன் பவுண்டுகள் உள்பட 81 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 41 கோடியே 90 லட்சம் ரூபாய் வங்கி நிரந்தர வைப்பீடு முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக, அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி திமுக எம்.பி-யுமான கௌதம சிகாமணி, கே.எஸ்.ராஜ மகேந்திரன், வி.ஜெயசந்திரன், கே.சதானந்தம், கோபிநாத் மற்றும் கே.எஸ்.பிஸ்னஸ் கவுஸ் நிறுவனம் உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக அமலாக்கத் துறை சார்பில் ஆகஸ்ட் மாதம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 90 பக்க குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக நவம்பர் 24ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரான கௌதம சிகாமணி உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் பதிவுக்காக வழக்கு விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (டிச 22) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கௌதம சிகாமணி ஆஜராகாத நிலையில், அவர் தரப்பில் விசாரணை அடுத்த மாதம் தள்ளிவைக்க வேண்டுமெனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை அடுத்து இந்த வழக்கை நீண்ட நாட்கள் தள்ளிவைக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, ஜனவரி 4ஆம் தேதி குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - பொன்முடி சந்திப்பு! அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.