ETV Bharat / state

தென்மாவட்ட மழை பாதிப்பு: நிவாரணப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 29, 2023, 11:54 AM IST

Updated : Dec 29, 2023, 1:07 PM IST

நிவாரணம் பணி குறித்து அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் ஆலோசனை
தென்மாவட்ட மழை பாதிப்பு.

Flood Relief fund: தென்மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கும் பணி குறித்து, பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களின் மாவட்ட ஆட்சி தலைவர்கள் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்களுக்கு தலைமைச் செயலாளர் அறிவுரைகள் வழங்கினார்.

சென்னை: தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகனமழையின் காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில், பல்வேறு மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டனர். இதனை எதிர்கொள்ளும் வகையில், பல்வேறு நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, பாதிப்பின் அடிப்படையில், 6 லட்சத்து 63 ஆயிரத்து 760 குடும்பங்களுக்கு, நிவாரணத் தொகையாக ரூ. 6 ஆயிரம் மற்றும் 5 கிலோ அரிசி வழங்கவும், 14 லட்சத்து 31 ஆயிரத்து 164 குடும்பங்களுக்கு, ஆயிரம் ரூபாய் வழங்கவும் அரசு ஆணைகள் பெறப்பட்டது.

அதன் அடிப்படையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களின், மாவட்ட ஆட்சி தலைவர்கள், காவல் ஆணையாளர்கள் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா நேற்று (டிச. 28) முன்னேற்பாடுகள் கூட்டம் நடத்தி, நிவாரணப் பணியினை சிறப்புடன் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கினார்.

மேலும், மக்களுக்கு நிவாரனம் வழங்கும் பணியில், குறைபாடுகள் ஏதுமின்றி, கூட்ட நெரிசல் இன்றி, உரிய தேதிகளில் அட்டைதாரர்கள் நிவாரணத் தொகை பெறும் வகையில், சுழற்சி முறையில் விநியோகம் மேற்கொள்ளும் வண்ணம், கடந்த டிசம்பர் 26 தேதி, அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை பெறவேண்டிய நாள் மற்றும் நேரம் குறித்து டோக்கன்கள் அவர்களின் வீடுகளில் நேரடியாக வழங்கப்பட்டது.

இந்நிலையில், இன்று (டிச.29) முதல், நிவாரணத் தொகை டோக்கன்களை பெற்ற அட்டைதாரர்கள், அவர்களுக்கு தொடர்புடைய நியாய விலைக் கடைகளில், குறித்த நாட்களில், குறித்த நேரத்தில் அவர்களுக்குரிய நிவாரண உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

மேற்படி, நிவாரணத் தொகையில் பொதுமக்களுக்கு புகார்கள் எழும் சூழலில், அதனை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணும் வகையில், திருநெல்வேலிக்கு 93424 71314, 97865 66111 எண்களிலும், தூத்துக்குடிக்கு 94864 54714, 1077 எண்களிலும், தென்காசிக்கு 04633-290548 எண்ணிலும், கன்னியாகுமரிக்கு 04652-231077 எண்ணிலும், கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருகின்றன.

மேலும், உணவுப் பொருள் வழங்க, நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் அலுவலகத்தில் 044-28592828 என்ற எண்ணில் கட்டுப்பாட்டு அறை அலுவலக பணி நேரத்தில் செயல்படும். பொதுமக்களுக்கு வெள்ள துயர் துடைக்கும் நோக்குடன் வழங்கப்படும் நிவாரண உதவிகள், பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்படும் நிலையில், பொதுமக்கள் இப்பணிக்கு போதுமான ஒத்துழைப்பு வழங்கி நிவாரணம் பெற வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வேரர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், காவல் துறைத் தலைவர், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர், அரசு முதன்மைச் செயலர் உள்துறை, அரசு முதன்மைச் செயலர் நகராட்சி, நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, அரசு செயலர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குநர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: விஜயகாந்த் உடலுக்கு நடிகர் விஜய் கண்ணீர் மல்க நேரில் அஞ்சலி!

Last Updated :Dec 29, 2023, 1:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.