ETV Bharat / state

மக்களிடையே பீதியை கிளப்புகிறார் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் மா. சுப்பிரமணியன் கண்டனம்

author img

By

Published : Jul 31, 2023, 5:07 PM IST

Etv Bharat
Etv Bharat

திமுக ஆட்சியின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக மக்களிடம் அச்சத்தை கிளப்பும் வகையில் விரோதப் போக்கை கையாளுகிறார். மக்கள் டெங்கு, மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டு அவதியுறுகிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''7.5.2021 அன்று திமுக அரசு பதவியேற்கும்போது உச்சத்திலிருந்த கரோனா எனும் கொள்ளை நோயை விரட்டி அடித்து, கரோனா எண்ணிக்கையை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வந்து சாதனை புரிந்துள்ளது. திமுக ஆட்சியின் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக டெங்கு, மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டு மக்கள் அவதியுறுகிறார்கள் என்று பீதியை கிளப்பும் விரோதப் போக்கை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி.கே. பழனிசாமி கையாளுகிறார்" என்று தெரிவித்திருந்தார் .

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, 2019ஆம் ஆண்டு மட்டும் டெங்கு பாதிப்பு 8,527ஆக இருந்ததையும், மேலும் மலேரியாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,088 இருந்ததையும், இந்த ஆண்டு (30.07.2023) வரை மலேரியாவினால் 164 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டினார்.

அதேபோல் 2019ஆம் ஆண்டு சிக்கன்குனியாவால் 681 பாதிக்கப்பட்டார்கள் என்றும், இந்த ஆண்டு (30.7.2023) வரை 45 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, மக்களை காக்கும் பணியை செய்து வருவதால் தான் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோயினால் ஏற்படும் பாதிப்பு குறைந்து, கட்டுக்குள் இருக்கிறது என்று அறிவித்திருந்தார்.

தொடர்ந்து அந்த அறிக்கையில், "அதிமுக ஆட்சிகாலத்தில் மருத்துவத்துறை எந்த ஒரு புதிய திட்டங்களையும் கொண்டு வராமல், அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருந்தது. மு.க. ஸ்டாலின் ஆட்சியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 திட்டம், இதயம் காப்போம் திட்டம், சிறுநீரக பாதுகாப்புத் திட்டம், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் எனப் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, அதன் மூலம் கோடிக்கணக்கான மக்கள் மருத்துவப் பயன் பெற்று வருகின்றனர்" எனக் குறிப்பிட்டு இருந்தார்.

விராலிமலைத் தொகுதியின் அவலம்: "ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், கடந்த 10 ஆண்டுகள் அதிமுக அரசு மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் விராலிமலை தொகுதியில் உள்ள அன்னவாசல் அரசு மருத்துவமனை வளாகத்தில், சரியாக பராமரிப்பின்றி அவதியுற்று, சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்ட 50 மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களை காப்பாற்றுவதற்கு பழனிசாமியும் வழிகாட்டவில்லை, விஜயபாஸ்கரும் அவர் தொகுதியையே கடந்த 10 ஆண்டுகளாக பார்க்கவில்லை என்பதை தமிழ்நாடு மக்கள் உணராமல் இல்லை" தற்போதைய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.

மாத்திரைப்பற்றாக்குறை என உளறுகிறார்: "தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் 7 முதல் 10 முறைக்கு மேல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்க்காத மருத்துவமனையில்லை, ஆய்வு செய்யாத ஆரம்ப சுகாதார நிலையம் இல்லை என்ற நிலையில் தமிழ்நாடு மருத்துவத்துறையில் தன்னிறைவுப்பெற்ற மாநிலமாக திகழ்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாத பழனிசாமி வாய் புளித்தது மாங்காய் புளித்தது என்பது போல் மருந்து மாத்திரை பற்றாக்குறை என்று உளறுகிறார்.

இதேபோல் 16.10.2022 அன்று சேலம் மாவட்டத்தில் மருந்துகள் பற்றாக்குறை என்று உளறினார். அவர் உளறிய சில மணி நேரங்களிலே அவர் ஊரான சேலம் மாவட்டத்தில் உள்ள TNMSC மருந்து கிடங்கை முதலமைச்சரின் உத்தரவின்படி ஆய்வு மேற்கொண்டு அனைத்து மருந்துகளும் இருப்பில் உள்ளதை நிரூபித்தோம். வேண்டுமென்றால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியை வரச் சொல்லுங்கள், அவருடனே கூட்டு ஆய்வு மேற்கொள்வோம் என்று கூறியதற்கு பதில் சொல்லாத எதிர்கட்சித் தலைவர் சொந்த ஊரில் நடைபெற்றதை மறந்துவிட்டு மருந்துகள் இல்லை என்றும், TNMSC என்று ஒன்று உள்ளதா? என்று வினவுகிறார்" என்று கூறியுள்ளார்.

மருந்து கிடங்குகள்: "முதலமைச்சர் நிதிநிலை அறிக்கையில் இதுவரை மருந்து கிடங்குகள் அமையப்பெறாத மாவட்டங்களான தென்காசி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய 5 இடங்களில் புதிய மருந்து கிடங்குகள் ரூ.30 கோடி செலவில் அமைக்கப்பெற்று பயன்பாட்டிற்கு வரும் தருவாயில் உள்ளது. தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தில் உள்ள மருந்துகள் இருப்பு எண்ணிக்கை பற்றி உதாரணத்திற்கு சில கூறுகிறேன்".

காய்ச்சல் மேலாண்மை மருந்துகளை பொறுத்தவரை,

  • Paracetamol Tab 500 MG இருப்புகளின் எண்ணிக்கை 24.10 கோடி, 5.9 மாதங்களுக்குகான மருந்துகள் இருப்பில் உள்ளது.
  • Diclofenac Sodium Inj IP 25 MG இருப்புகளின் எண்ணிக்கை 24.48 இலட்சம், 4.6 மாதங்களுக்குகான மருந்துகள் இருப்பில் உள்ளது.
  • Paracetamol Tab 650 MG இருப்புகளின் எண்ணிக்கை 2.21 கோடி, 6.7 மாதங்களுக்கான மருந்துகள் இருப்பில் உள்ளது.

தொற்றா நோய்களுக்கான ஆன்டிபயாடிக் மருந்துகளை பொறுத்தவரை,

  • Metronidazole Tab IP 200 MG இருப்புகளின் எண்ணிக்கை 1.66 கோடி, 2.4 மாதங்களுக்குகான மருந்துகள் இருப்பில் உள்ளது.
  • Amoxycillin Cap IP 250 MG இருப்புகளின் எண்ணிக்கை 14.05 கோடி, 5.8 மாதங்களுக்குகான மருந்துகள் இருப்பில் உள்ளது.
  • Doxycycline CAP IP 100 MG இருப்புகளின் எண்ணிக்கை 2.24 கோடி, 6.8 மாதங்களுக்குகான மருந்துகள் இருப்பில் உள்ளது.
  • Erythromycin Stearate TAB IP 250 MG இருப்புகளின் எண்ணிக்கை 58.29 இலட்சம், 4.8 மாதங்களுக்குகான மருந்துகள் இருப்பில் உள்ளது.

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மருந்து கிடங்குகளில் உள்ள மருந்துகளின் மொத்த மதிப்பு 170.82 கோடி ரூபாய் (ரூ.170,82,98,756) ஆகும். இது பற்றியெல்லாம் அறியாமல், TNMSC என்று உள்ளதா? என்று கேட்பதற்கு காரணம் அரசியல், தேர்தல் தோல்வி பயம்தான் என்றும், முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி மக்களை கேடயமாக இருந்து காக்கும் என்பதில் எள்ளளவும் ஐயம் தேவையில்லை என்றும் அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இரட்டை சதம் அடித்த தக்காளி!... விலை குறையாததற்கு காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.