ETV Bharat / state

தரகர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு... லேப்டாப்கள், ஆவணங்கள் பறிமுதல்!

author img

By

Published : Jul 27, 2021, 9:47 PM IST

Former Transport Minister Vijayabaskar
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது போடப்பட்ட வழக்கு தொடர்பாக, தரகர் ரவிக்குமாருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனை நிறைவடைந்துள்ளது.

முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 26 இடங்களில், லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் கடந்த 22ஆம் தேதி அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில், தற்போது போக்குவரத்துத் துறைக்கு உபகரணங்களை வழங்கிவந்த தனியார் நிறுவனங்களுக்கு ஏஜென்டாக இருந்த ரவிக்குமாரின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் இன்று காலை 11 மணியளவில் சோதனையைத் தொடங்கினர்.

லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி யுவராஜ் தலைமையில் சுமார் 10 பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.

தரகர் மூலம் பணம் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சென்றதா?

சந்தையில் குறைவான விலைக்கு கிடைக்கக்கூடிய உபகரணங்களை அதிக விலைக்கு போக்குவரத்துத் துறைக்கு விற்று, அதன் மூலம் கிடைக்கக்கூடிய பணமானது தரகர்கள் மூலம் அமைச்சருக்கு கொண்டு செல்லப்பட்டது என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றது.

இதுமட்டுமின்றி,நெடுஞ்சாலைத்துறை டெண்டரை 23 கோடி ரூபாய்க்குப் பதிலாக 900 கோடிக்கு டெண்டர் விட்டதாக விஜயபாஸ்கர் மீது எழுந்த குற்றச்சாட்டு குறித்தும் விசாரணை நடத்தினர்.

சுமார் ஏழு மணி நேரம் நீடித்த சோதனை, தற்போது நிறைவு பெற்றுள்ளது. எவ்வித கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த சோதனை முடிவில் 3 லேப்டாப்கள், ஆவணங்கள், வங்கிப் பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாகவும், அவை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது போடப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கிற்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்த பிறகே தெரியவரும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்க முதலமைச்சர் அறிவுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.