ETV Bharat / state

பாதாள சாக்கடைகளை சுத்தப்படுத்த மனிதர்களை ஈடுபடுத்தக்கூடாது என்றுகூறியுள்ளோம்: கோர்டில் அரசு தகவல்!

author img

By

Published : Jul 13, 2023, 6:01 PM IST

தமிழ்நாடு அரசு
Tamilnadu government

பாதாள சாக்கடைகள் சுத்தப்படுத்தும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தக் கூடாது என அனைத்து நகராட்சி, மாநகராட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அதை மீறும் அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், குற்ற வழக்கும் தொடரப்படுகிறது என தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை: பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் நடைமுறையை முழுவதுமாக ஒழிக்கக் கோரியும், ஊழியர்களை இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரியும், சபாய் கர்மாச்சாரி அந்தோலன் என்ற அமைப்பின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் நடைமுறை அமலில் உள்ளதா? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு மனுதாரர் அமைப்பு சார்பில் மாநகராட்சியினர் பணியமர்த்துவதாகவும், செப்டிக் டேங்குகளை சுத்தப்படுத்தும் பணியில் தனியாரும் ஈடுபடுத்துகின்றனர் என்றார்.

இதையும் படிங்க: வசதியின்றி தவிக்கும் மலைவாழ் மக்கள் - ரேஷன் பொருட்கள் வழங்க சென்ற பாஜகவினரிடம் திமுகவினர் தகராறு

இதை மறுத்த சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வதைத் தடுக்கும் வகையில் விதிகள் இயற்றப்பட்டு, கடந்த ஆகஸ்ட் 2022-ல் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், சுத்தம் செய்யும் பணிகளுக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதாகவும், விதிகளை மீறுவோருக்கு எதிராக குற்ற நடவடிக்கைகள் எடுப்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

வழக்கு தொடர்வது என்பது தொடர் நடவடிக்கை தான் எனவும், தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அரசு பிளீடர் முத்துகுமார், பாதாள சாக்கடைகள் சுத்தப்படுத்தும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தக் கூடாது என அனைத்து நகராட்சி, மாநகராட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், இதை மீறும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், குற்ற வழக்கும் தொடரப்படுகிறது என விளக்கமளித்தார்.

இந்த நடவடிக்கைகளை தமிழகம் முழுவதும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: Delhi Flood: அபாய கட்டத்தை கடந்த யமுனை - டெல்லியில் முக்கிய சாலைகளில் வெள்ளப்பெருக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.