ETV Bharat / state

H.Raja: பெண்களுக்கு எதிரான அவதூறு கருத்து: எச்.ராஜாவுக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்ய நீதிமன்றம் மறுப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2023, 11:03 AM IST

Updated : Aug 29, 2023, 12:53 PM IST

H raja
H raja

H Raja case in Madras high court: பெண்களை இழிவு படுத்தும் வகையில் அவதூறாக பேசி கருத்துக்களை வெளியிட்ட பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா மீதான 11 வழக்குகளை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கடந்த 2018-ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற இந்து முன்னணி பொதுக்கூட்டத்தில், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களையும், அவர்களின் குடும்ப பெண்களையும் மிகவும் தரக்குறைவாக விமர்சித்து பேசியதாக, வேடசந்தூர், நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதே போல் பெரியார் சிலையை உடைப்பேன் என்று ட்விட்டரில் (சுட்டுரையில்) பதிவு செய்தது தொடர்பாகவும், திமுக எம்பி கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்து கூறியதாகவும் வழக்குகள் தொடரப்பட்டன. தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவான 11 வழக்குகளை ரத்து செய்யக் கோரி எச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.

அவை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணக்கு வந்தபோது, எச்.ராஜா தரப்பில், அறநிலையத்துறை அதிகாரிகள் புகார்கள் அனைத்தும் செவி வழி செய்தி தான் என்றும், ஆதாரங்கள் ஏதும் இல்லை. பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று டிவிட்டர் பதிவிட்டார் என்பதற்கும் ஆதாரம் சேகரிக்கப்படவில்லை.

எம்.பி. கனிமொழி மீதான கருத்து அரசியல் ரீதியான கருத்து என்றும், அதிலும் கனிமொழி புகார் அளிக்காத நிலையில், மூன்றாம் நபர் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டதால் எச்.ராஜா மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

காவல்துறை தரப்பில், எச்.ராஜாவின் பேச்சு தனிப்பட்ட நபர்களை மட்டுமல்லாமல், அனைவரையும் பாதிக்க கூடிய வகையில் உள்ளது என்றும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் பேசி உள்ளதால் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்றமே தன்னிச்சையாக வழக்கு தொடர அதிகாரம் உள்ளது என்பதால் வழக்குகளை ரத்து செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், எச்.ராஜா அவதூறாக பேசுவது இதுவே முதல் முறை அல்ல, இதுபோல் கருத்துகளை கூறக்கூடாது என்றும், பெண்களை குறி வைத்து குற்றச்சாட்டுகளை கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், வெறுப்புணர்வு பேச்சுக்களுக்கு எதிராக உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியதையும் குறிப்பிட்டு எச்.ராஜாவின் மனுக்கள் மீதான உத்தரவை (ஆகஸ்ட் 24) தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, பெண்களை இழிவு படுத்தும் வகையில் அவதூறாக பேசி கருத்துக்களை வெளியிட்ட பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா மீதான 11 வழக்குகளை ரத்து செய்ய முடியாது என தெரிவித்து, வழக்கை தள்ளுபடி செய்தார்.

இதையும் படிங்க: "மாநகராட்சி பகுதிகளில் புதிய வீடுகளை கட்டுவதற்கான நிபந்தனைகளை நீக்குக" - ஈபிஎஸ்!

Last Updated :Aug 29, 2023, 12:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.