ETV Bharat / state

லிங்க்டு இன் மூலமாக சிறிய தொழிலதிபர்களை குறிவைத்து மோசடி செய்யும் நைஜீரிய கும்பல் கைது!

author img

By

Published : Mar 24, 2023, 1:00 PM IST

chennai
லிங்க்டு

ரத்தப் புற்றுநோயை குணப்படுத்தும் மூலிகை ஆயிலை வாங்கி ஏற்றுமதி செய்தால், அதிகளவு கமிஷன் தருவதாக ஆசை வார்த்தைக் கூறி, சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரிடம் 34 லட்சம் ரூபாய் மோசடி செய்த 4 நைஜீரியர்களை மும்பையில் வைத்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

சென்னை: சென்னை கொளத்தூரை சேர்ந்த விஜய்(25) என்பவர் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்து வருகிறார். இவரை கடந்த அக்டோபர் மாதம் லிங்க்டு இன் மூலமாக ''நோரா'' என்ற பெண்மணி தொடர்பு கொண்டுள்ளார். அவர், தான் கனடாவிலிருந்து பேசுவதாகவும், கனடாவில் ஒரு மருத்துவ நிறுவனத்தில் சி.இ.ஓ-வாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கனடாவில் ரத்தப் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு மருந்து தயாரிக்கப் பயன்படும் சில மருந்துப் பொருட்களை வாங்க உதவும்படி விஜயிடம் கோரியுள்ளார். மேலும் இந்தத் தொழிலில் கமிஷனாக நிறைய சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். பிறகு, புற்றுநோய்க்கான மருந்து தயாரிக்கப் பயன்படும் மூலிகை ஆயில் வேண்டும் எனவும், இந்த ஆயில் 1 லிட்டரின் விலை 1.80 லட்சம் ரூபாய் எனவும், இது டெல்லியில் உள்ள ஒரு நிறுவனத்தில் கிடைப்பதாகவும் தெரிவித்து நிறுவனத்தின் தொடர்பு எண்ணையும் கொடுத்துள்ளார்.

மூலிகை ஆயில்
மூலிகை ஆயில்

அவர்களிடமிருந்து மூலிகை ஆயிலை வாங்கி தனக்கு ஏற்றுமதி செய்தால் ஒரு லிட்டர் ஆயிலை 4 லட்சம் ரூபாய் வரை விற்கலாம் என அவர் கூறியதை நம்பி, ஏற்றுமதி உரிமம் உள்ளிட்டவற்றை வாங்கிய விஜய் முதற்கட்டமாக மாதிரிக்காக 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கொடுத்து 1 லிட்டர் மூலிகை ஆயிலை வாங்கியுள்ளார்.

பின்னர் நோராவிற்கு தகவல் தெரிவிக்க, மூலிகை ஆயில் உண்மையானதா என சோதனை செய்ய வேண்டும் எனக்கூறி மும்பையில் இருந்து வெளிநாட்டு பெண் ஒருவர் சென்னை விமான நிலையம் வந்துள்ளார். அப்போது அந்த வெள்ளைக்கார பெண்மணி மூலிகை ஆயில் மாதிரியை எடுத்துக் கொண்டு, மீண்டும் உடனடியாக மும்பைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

பின்னர் மூலிகை ஆயில் உண்மை எனக்கூறி மொத்தமாக 18 லிட்டர் மூலிகை ஆயில் வேண்டும் என நோரா கூறியதால், விஜய் அதற்கான தொகையாக சுமார் 34 லட்சம் ரூபாய் பணத்தை டெல்லி நிறுவனம் கூறிய வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். அதன் பிறகு மொத்த கும்பலும் தொடர்புகளை துண்டித்துவிட்டு தலைமறைவாகிவிட்டது.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த விஜய், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினரிடம் கடந்த டிசம்பர் மாதம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், விஜயிடம் நோரா கூறிய டெல்லி மற்றும் கனடா நிறுவனம் உள்ளிட்ட அனைத்தும் போலி என்பது தெரிய வந்துள்ளது. கனடாவில் இருந்து பேசுவது போல போலி புகைப்படங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை வைத்து மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது. விஜய் பணம் அனுப்பிய வங்கி கணக்குகளை வைத்து போலீசார் ஆய்வு செய்த போது, மும்பையில் உள்ள கார்கர் பகுதியில் வீடு எடுத்து நைஜீரிய கும்பல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் தனிப்படை போலீசார் மும்பைக்குச் சென்று பதுங்கி இருந்த நான்கு நைஜீரியர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் நைஜீரியா நாட்டை சேர்ந்த ஒகோரிகார்ஸ்வில் சைனாசா(32), உச்சே ஜான் இமேகா47), காட்வின் இமானுவேல்(32) மற்றும் எபோசி உச்சென்னா ஸ்டான்லி (32) என்பது தெரியவந்தது. லிங்க்டு இன் மற்றும் இந்தியா மார்ட் வெப்சைட்டில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்யக்கூடிய சிறிய தொழிலதிபர்களை குறிவைத்து இந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

குறிப்பாக மூலிகை பொருட்கள் தேவைப்படுவதாக கூறி தொழிலதிபர்களை குறிவைத்து, மூலிகை பொருட்கள் இருக்கக்கூடிய நிறுவனங்களை அறிந்து வைத்து, அங்கு போலியாக நிறுவனம் தொடங்கி மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது. கமாடிட்டி ஸ்கேம் என்ற பெயரில் வெறும் வாட்ஸ்அப் மற்றும் மெசேஜ் மூலமாக மட்டுமே பேசி இந்த மோசடியை நைஜீரிய கும்பல் அரங்கேற்றி இருப்பதும் தெரியவந்துள்ளது. பிறகு கைது செய்யப்பட்ட நான்கு நைஜீரியர்களையும் டிரான்ஸிட் வாரண்ட் பெற்றுக்கொண்டு, சென்னைக்கு அழைத்து வந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த கும்பல் இதே போல எத்தனை தொழிலதிபர்களை ஏமாற்றி உள்ளது? என்றும், இந்த கும்பலில் தலைமறைவாக இருக்கும் நபர்கள் யார்? என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்த இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப் போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே இதே போன்ற மோசடியில் ஈடுபட்ட நைஜீரியர் ஒருவரை கடந்த 2020ஆம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: ஒரு ஆளை தேடும் 80,000 போலீஸ்.. யார் இந்த அம்ரித்பால் சிங்..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.