ETV Bharat / state

12 ஆண்டுக்கு பிறகு பயன்பாட்டுக்கு வந்த அண்ணா நகர் டவர்.. புதுப்பொலிவுக்கு தயாராகும் விக்டோரியா அரங்கம்!

author img

By

Published : Mar 21, 2023, 7:51 AM IST

Etv Bharat
Etv Bharat

சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள விக்டோரியா பொது அரங்கம் தொன்மை மாறாமல் மறுசீரமைக்கும் பணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி சிறப்புத் திட்டங்கள் துறை சார்பில் 'சிங்காரச் சென்னை 2.0' திட்டத்தின் கீழ் விக்டோரியா பொது அரங்கினை அதன் தொன்மை மாறாமல் புனரமைத்து மறுசீரமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க விக்டோரியா பொது அரங்கம் 32.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொன்மை மாறாமல் மறுசீரமைக்கப்பட உள்ளது. அரங்கம் உள்ளே அருங்காட்சியகத்துடன் கூடிய நிர்வாக அலுவலகம் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளதோடு முதல் தளத்தில் மிக முக்கிய பிரமுகர்களின் நிர்வாக இடமாகவும் மற்றும் கலாச்சார இடமாகும் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த மறுசீரமைப்பு பணிகள் அடுத்த இரண்டு ஆண்டுக் காலத்தில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "நேரு மைதானம் மறு சீரமைக்க நிதி வேண்டும் என கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நேரு உள் விளையாட்டு அரங்கில் உள்ள விளக்குகளை மாற்ற 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளது என்றும் விளையாட்டு நகரம் அமைக்க இரண்டு இடங்கள் தேர்வு செய்துள்ளோம் என்றும் விரைவில் ஒரு இடத்தை தேர்வு செய்து பணிகள் துவங்குவோம்" என தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அண்ணாநகர் கோபுர பூங்காவில் ரூ.97.60 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட கோபுரத்தினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். இந்த பூங்கா 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால் சென்னை வாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, மாநகராட்சி ஆணையர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் கடும் போராட்டம் - ஜாக்டோ ஜியோ கூட்டத்தில் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.