ETV Bharat / state

திருமானூரில் 621 காளைகளுடன் ஜல்லிக்கட்டு கோலாகலம்

author img

By

Published : Mar 11, 2023, 4:57 PM IST

Etv Bharat
Etv Bharat

மாசி மகத்தை முன்னிட்டு திருமானூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 621 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்

அரியலூர்: தமிழர்களின் பாராம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி உரிய விதிமுறைகளுடன் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. மதுரை அலங்காநல்லூர், பாலமேடு போன்ற இடங்களில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகுவிமர்சையாக நடத்தப்படுவது வழக்கம்.

ஆனால், அரியலூர் மாவட்டம் திருமானூரில் மாசி மாதத்தில் மாசி மகத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், இன்று (மார்ச் 11) காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கின. இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வாடிவாசல் அமைக்கப்பட்டு இருந்தது. இப்போட்டியில் 621 காளைகளை பிடிக்க 300 மாடு பிடி வீரர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது.

இந்த போட்டியில் கலந்து கொண்ட காளைகள் மற்றும் வீரர்களுக்கு முழு மருத்துவப் பரிசோதனைக்கு பின்னரே அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், மாடு பிடி வீரர்களுக்கு தேவையான மருத்துவ முகாம்கள் மற்றும் பொதுமக்களுக்கு குடிநீர் வசதிகள், பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. வருவாய்த்துறை, கால்நடைப் பராமரிப்புத்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து ஜல்லிக்கட்டுப் போட்டியினை சிறப்பாக நடத்தும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டது. அதோடு ஜல்லிக்கட்டுப் போட்டியினை அரசு வகுத்துள்ள நெறிமுறைகளின் படி முறையாக நடத்தி முடிக்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு போட்டி தொடங்கியது.

வாடி வாசலுக்கு மேல்புறம் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மேடையில் இருந்து அமைச்சர் சிவசங்கர், ஜல்லிக்கட்டு தொடர்பான பாதுகாப்பு உறுதி மொழியை முதலில் வாசித்தார். அந்த உறுதிமொழியை மாடு பிடி வீரர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட பொதுமக்கள் திரும்ப வாசித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதனை அடுத்து அமைச்சர் சிவசங்கர் எம்எல்ஏ சின்னப்பா ஆகியோர் கொடியசைத்து போட்டிகளை முறைப்படி தொடங்கி வைத்தனர். இதையடுத்து வாடிவாசலில் முகப்பு கேட் திறக்கப்பட்டு காளைகள் ஒவ்வொன்றாக சீறிப்பாய்ந்து களத்துக்கு வந்தன. மஞ்சள் சீருடையில் அணிவகுத்த மாடுபிடி வீரர்கள் சீறி வந்த காளைகளை பாய்ந்து பிடித்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்தப் போட்டிகளில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த காளைகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்து போட்டிகளில் பங்கேற்க செய்தனர். சில காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் ரொக்கப் பரிசு தங்க காசு போன்ற பரிசுகளையும் அறிவித்து வீரர்களை உற்சாகப்படுத்தினர். இந்த போட்டியின் வர்ணனையாளர் களத்தில் இறங்கும் காளையின் பெயர் எந்த ஊரை சேர்ந்தது ஏற்கனவே எத்தனை போட்டிகளில் பங்கேற்றது போன்ற விவரங்களை அவ்வப்போது தெரிவித்துக் கொண்டே இருந்தார்.

இதைக் கேட்டுக் கொண்டே ஒவ்வொரு வீரர்களும் காளையின் அசைவுக்கு ஏற்றவாறு காளைகளைப் பிடிக்க முன்னேறினர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற காளையர்களுக்கு பீரோ, கட்டில், வர்சில்வர், அண்டா ,ரொக்க பரிசு என பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. ஒரு சில காளைகள் கூட்டத்தைப் பார்த்து மிரண்டு பொதுமக்கள் இருக்கும் பகுதிக்கும் ஓடின. மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருந்து அவ்வப்போது கீழே விழும் வீரர்கள் கீழே விழும் பார்வையாளர்கள் போன்றவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்றனர்.

ஊரடங்கு காலத்திற்குப் பிறகு மிகவும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் திரளாக குவிந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில், மண்டல இணை இயக்குநர் (கால்நடைப்பராமரிப்புத்துறை) கிரிஸ்டோபர், கோட்டாட்சியர் ராமகிருணன், வட்டாட்சியர் கண்ணன், திருமானூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் உத்திராபதி மற்றும் சுகாதாரத்துறை மருத்துவ அலுவலர்கள், ஜல்லிக்கட்டு விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஜல்லிக்கட்டு போட்டியால் திருமானூர் பகுதியே திருவிழா கோலம் பூண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஒரிஜினல் தளபதிக்கே டஃப் கொடுக்கும் ஒன்றிய தளபதி: பட்டியல் போடும் ஹைடெக் எம்எல்ஏ; பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.