ETV Bharat / international

உக்ரைன் - ரஷ்யா போர் ஓராண்டு நிறைவு! தொடரும் மரண ஓலம்!

author img

By

Published : Feb 24, 2023, 11:27 AM IST

உக்ரைன் - ரஷ்யா போர்
உக்ரைன் - ரஷ்யா போர்

உக்ரைன் - ரஷ்யா போர் ஒராண்டை நிறைவு செய்தது. ஓராண்டு நிறைவுயொட்டி ரஷ்யா பயங்கர தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாஸ்கோ: உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை ஓராண்டை நிறைவு செய்தது. உருக்குலைந்த உக்ரைன் நகரங்களில் தொடர்ந்து மரண ஓலம் கேட்டுக் கொண்டு இருக்கின்றன. போரால் சொந்த ஊரை விட்டு அகதிகளாக அண்டை நாடுகளில் குடியெயர்ந்த மக்கள் மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்பும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

சோவியத் யூனியன் பிளவு பட்டது முதல் தனி நாடாக உருவான உக்ரைனை, மீண்டும் தன்னுடன் இணைத்துக் கொள்ள ரஷ்யா திட்டமிட்டது. அதேநேரம் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளில் தன்னை இணைத்துக் கொள்ள உக்ரைன் முயற்சித்து வந்தது. நேட்டோ படையில் உக்ரைன் இணைவது பிராந்திய ரீதியிலான பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என ரஷ்யா கருதியது.

இதையடுத்து கடந்த அண்டு பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை ரஷ்யா மேற்கொண்டது. தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் ரஷ்யாவின் தாக்குதலில் உருக்குலைந்தன. ஐரோப்பியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் ரஷ்யாவுக்கு தக்க பதிலடியை உக்ரைன் வழங்கி வருகிறது.

ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் இதுவரை 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டதாகவும், 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் ஆய்வறிக்கை கூறுகின்றன. அதேநேரம் ஐநா அறிக்கையை விட பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என மற்ற தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

போர் நிறுத்தம் குறித்து பல்வேறு நாடுகள் ரஷ்யாவுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம் செய்து இரு தரப்பு பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தன.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தனக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை வீட்டோ அதிகாரம் மூலம் ரஷ்யா ரத்து செய்தது. தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் வகையில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவில் உள்ள தங்களது நிறுவனங்களை மூடி நாட்டை விட்டு வெளியேறின.

கெர்சன், புச்சா, மரியுபோல், கார்கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷ்யா தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை கொண்டு உக்ரைன் கொடுத்த பதிலடியால் ரஷ்யா ராணுவம் பலத்த சேதத்தை கண்டது. ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே ரஷ்யாவுக்கு எதிரான போரில் தங்கள் நாட்டிற்கு ஆதரவு அளிக்குமாறும், ஆயுதங்களை வழங்கி உதவுமாறும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டினார். இதனிடையே கடந்த நவம்பர் - டிசம்பர் மாதத்தில் கெர்சன் நகரில் உள்ள நீப்ரா உள்ளிட்ட நகரங்களில் இருந்து ரஷ்யா பின்வாங்கியது.

டொனஸ்க் நகரில் உள்ள ரஷ்ய ராணுவ முகாமை தாக்கி அழித்த உக்ரைன் ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனிடையே உக்ரைனுக்கு, அதிநவீன டேங்கர்களை ஜெர்மனி மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து வழங்கி வருகின்றன. அண்மையில் உக்ரைன் சென்ற அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், கூடுதல் ராணுவ தொகுப்பை உக்ரைனுக்கு வழங்குவதாக அறிவித்தார்.

இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை இன்றுடன் ஓராண்டை நிறைவு செய்கிறது. போர் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் முக்கிய ராணுவ முகாம்களில் ரஷ்ய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிறது. அதேநேரம் உக்ரைன் ராணுவமும் தக்க பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் கொடி வர்ணத்தில் மிளிர்ந்த பாரீஸ் ஈபிள் டவர்
உக்ரைன் கொடி வர்ணத்தில் மிளிர்ந்த பாரீஸ் ஈபிள் டவர்

உக்ரைன் - ரஷ்யா போர் ஒராண்டு நிறைவு பெற்றதை நினைவு கூறும் வகையில், போர் நினைவு பிரதிபலிக்கும் வகையிலான ரூபாய் நோட்டுகளை உக்ரைன் மத்திய வங்கி அச்சிட்டு வெளியிட்டு உள்ளது. மறுபுறம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள ஈபிள் டவர் உக்ரைன் தேசியக் கொடியின் வர்ணத்தில் ஒளிர்ந்தன.

உக்ரைன் போர் நினைவு பணம் அறிமுகம்
உக்ரைன் போர் நினைவு பணம் அறிமுகம்

இதையும் படிங்க: Punctuality முக்கியம் பிகிலு! 10 நிமிட தாமதத்தால் 1,000 கி.மீ திருப்பி அனுப்பப்பட்ட விமானம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.