ETV Bharat / entertainment

அஜித் முதல் ஹன்சிகா வரை.. காதல் கல்யாணம் செய்த திரை பிரபலங்கள்!

author img

By

Published : Feb 13, 2023, 10:16 AM IST

அஜித் முதல் ஹன்சிகா வரை… காதல் திருமணம் செய்துகொண்ட திரை பிரபலங்கள்
அஜித் முதல் ஹன்சிகா வரை… காதல் திருமணம் செய்துகொண்ட திரை பிரபலங்கள்

தமிழ் சினிமாவையும் காதலையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. என்னதான் அதிரடி ஆக்ஷன் படங்கள் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றாலும் காதல் படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். அப்படி ஒரு படத்தில் இணைந்து நடிக்கும் போது நடிகர் நடிகைகளுக்குள் காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொண்ட பிரபலங்களும் உண்டு. அப்படி தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்து கொண்ட திரை பிரபலங்களைப் பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

அஜித் - ஷாலினி

தமிழ் சினிமாவில் காதல் நாயகனாக நடிக்கத் தொடங்கி இன்று தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நடிகராக இருப்பவர் அஜித். ஆரம்பக் காலங்களில் இவர் தொடர்ந்து காதல் படங்களில் நடித்து வந்தார். காதல் நாயகன், ஆசை நாயகன் என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்பட்டார். ஆரம்பக் காலத்தில் இவருக்கு அதிகமான பெண் ரசிகைகள் இருந்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அமராவதி, ஆசை, காதல் மன்னன், காதல் கோட்டை என ஏராளமான காதல் படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் நாயகியானவர் ஷாலினி. இவரும் அஜித்தும் இணைந்து நடித்த அமர்க்களம் படத்தில் தான் இருவருக்கும் காதல் மலர்ந்தது. படம் முடியும்போது இருவரும் பரஸ்பரம் காதலைப் பரிமாறிக் கொண்டனர். இருவரும் 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்குப் பிறகு ஷாலினி சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

சூர்யா - ஜோதிகா

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக நுழைந்தாலும் தனது திறமையால் முன்னணி நடிகராக விளங்குபவர் சூர்யா. இவர் தன்னுடன் காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், மாயாவி ஆகிய படங்களில் நடித்த ஜோதிகாவுடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இன்று வரை சிறந்த நட்சத்திர ஜோடிகளாக வலம் வருகின்றனர். இந்த ஜோடிக்கு தியா, தேவ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஜோதிகா தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட‌ திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் சூர்யா, ஜோதிகா இணைந்து 2டி என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

சினேகா - பிரசன்னா

சினேகா தமிழ் சினிமாவில் புன்னகை அரசி எனப் புகழப்படுபவர். இவருக்கு நடிகர் பிரசன்னாவும் அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்த போது காதல் மலர்ந்தது. இதனை அடுத்து இருவரும் 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

சுந்தர் சி - குஷ்பூ

சுந்தர் சி முறை மாமன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அப்படத்தில் நாயகியாக நடித்த குஷ்புவுக்கும் சுந்தர் சி-க்கும் இடையே காதல் மலர்ந்தது. இதனைத் தொடர்ந்து இருவரும் 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

ராதிகா - சரத்குமார்

பாரதிராஜா இயக்கிய 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார் நடிகை ராதிகா. பாரதிராஜாவின் கண்டுபிடிப்பு என்பது மட்டுமின்றி நடிகர் எம்.ஆர்.ராதாவின் வாரிசு என்பதாலும் நடிப்பு இவருக்குக் கைவந்த கலையாக இருந்தது. இவர் நடிகர் சரத்குமாரைக் காதலித்து மணமுடித்துக்கொண்டார்‌. இவர்களது திருமணம் 2001ம் ஆண்டு நடைபெற்றது.

அட்லீ - பிரியா

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்து 'ராஜா ராணி' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. அதன் பிறகு விஜய்யை வைத்துத் தெறி, மெர்சல், பிகில் என தொடர் வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். தற்போது இந்தியில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இவரும் நடிகை பிரியாவும் காதலித்து வந்தனர். இவர்களது திருமணம் 2014ஆம்‌ ஆண்டு நடைபெற்றது. சமீபத்தில் இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஆர்யா - சாயிஷா

சாக்லேட் பாயாக தமிழ் சினிமாவில் வலம் வந்த ஆர்யா தன்னுடன் கஜினிகாந்த் படத்தில் நடித்த சாயிஷாவை காதலித்துக் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தற்போது ஒரு பெண் குழந்தை பிறந்ததுள்ளது.

ஆதி - நிக்கி கல்ராணி

ஈரம், மிருகம் , மரகத நாணயம் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களுக்குப் பரிச்சயமான நடிகர்‌ ஆதி. இவரும் நடிகை நிக்கி கல்ராணியும் காதலித்து வந்த நிலையில் இவர்களது திருமணம் கடந்தாண்டு நடைபெற்றது.

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் எனப் புகழப்படுபவர் நயன்தாரா. இந்த நிலையில் இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 6 ஆறு ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடி தான் என்ற படத்தில் நயன்தாரா நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நெருங்கிய உறவினர்கள்‌ மத்தியில் திருமணம் செய்து கொண்டனர். மேலும் இருவருக்கும் வாடகைத் தாய் முறையில் இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்

நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக். மணிரத்னம் இயக்கிய கடல் படத்தின்‌ மூலம் நாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டுக் குத்து, ரங்கூன், இவன்‌ தந்திரன் ஆகிய படங்களில் நடித்திருந்தார். முத்தையா இயக்கத்தில் தேவராட்டம் படத்தில் நடிகை மஞ்சிமா மோகனுடன் இணைந்து நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதனைத் தொடர்ந்து இருவீட்டார் சம்மதத்துடன் இருவரும் கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டனர்.

ஹன்சிகா மோத்வானி - சோஹைல் கதுரியா

நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தில் அறிமுகமானார். பின்னர் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களின் ஆதர்ச நாயகியாக இடம் பிடித்தார். இவர் கடந்த ஆண்டு டிசம்பரில் சோஹைல் கதுரியா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். மிகவும் பிரமாண்டமாக இத்திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'வடக்கனும் சக ஏழைதான்.. யாதும் ஊரே யாவரும் கேளிர்' - வைரலாகும் விஜய் ஆண்டனி கருத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.