கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்திற்கு சொந்தமான தேயிலைத் தோட்டங்கள் உள்ளது. இங்கு சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். டேன் டீ தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் மே மூன்றாம் தேதி வரை சம்பளம் தரவேண்டியும், ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று (ஆக.14) வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் சிஐடியூ கோரிக்கையை பேச்சுவார்த்தையில் தீர்வு காண வால்பாறை வட்டாட்சியர் ராஜன் தலைமையில் முத்தரப்பு சமரச கூட்டம் நடைபெற்றது. இதில் சம்பளம் நிலுவையாக ரூ.12.50 பைசா, சிக் லீவ், சம்பள லீவ் போன்றவற்றை நிர்வாகம் கணக்கீடு செய்து உடனடியாக வழங்கப்பட வேண்டும். ஒரு தொழிலாளி, ஒரு நாள் பணிக்கு வரவில்லை என்றால் ஏழு நாட்கள் சம்பளம் பிடித்தம் செய்வதாக நிர்வாகம் மிரட்டுவதை தவிர்க்க வேண்டும். தொழிலாளியின் வருங்கால வைப்பு நிதி தொகையை உடனடியாக லாசன் கோட்டத்தில் முறையாக இணைக்க வேண்டும். என்ற ஒன்பது அம்ச கோரிக்கையை வைத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தையின் இறுதியில் விரைவில் சுமூக முடிவு எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. பேச்சுவார்த்தையில் வால்பாறை வட்டாட்சியர் ராஜன், காவல் ஆய்வாளர் மகேஸ்வரி, டேன் டீ பொதுமேலாளர் விக்ரம், தொழிற்சங்க தலைவர் கே.ராஜ், தொழிற்சங்க துணைப் பொதுச்செயலாளர், செல்லத்துரை செல்வகணபதி, தில்லை ரத்தினம் விஜயேந்திரன், டேன்டீ குரூப் கமிட்டி மாரிமுத்து, தொழிற்சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.